அன்பர்களே !!
அவை அடக்கம் என்பது நமக்கெல்லாம் தெரியாத / தெரிந்த ஒன்று. தெரிந்திருப்பின் அதைக் கடைப்பிடிக்கிறோமா என்பது விடையில்லாத வினா.
அவையினிலே, அது அலுவலகமாய் இருக்கட்டும் - உறவின் கூட்டமாக இருக்கட்டும் அல்லது நட்பின் கூட்டமாக இருக்கட்டும் - அவையறிந்து பேச வேண்டும். மற்றவர்கள் மனங்கோணாமல் பேச வேண்டும். மனம் மட்டுமல்ல சற்றே முகம் சுளிக்கும் வண்ணம் கூடப் பேசக் கூடாது. இதைக் கடைப்பிடிப்பது ஒரு கலை. நட்பின் மத்தியிலே ஒரு நண்பனைக் கிண்டல் செய்யும் வண்ணம் - அவன் மனது புண்படுமா என்ற கவலை சிறிதேனுமின்றிப் பேசுவது தவறல்லவா. அவன் செய்த சிறு தவறைக்கூட மற்றவர்கள் முன்னிலையில் சுட்டிக்காட்டுவது நாகரிகமில்லை அல்லவா. எபோழுதும் தவறுகளைச் சுட்டிக் காட்டுவது தனிப்பட்ட முறையில் இருப்பின் தவறுகள் வருந்தவும்/திருந்தவும் வாய்ப்புண்டு. அவையிலே சுட்டினால், அத்தவறு மேன்மேலும் வளரவும் வழியுண்டு.
குறாளாசான் கூறுவான்
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
இக்குறள் அவை அடக்கத்திற்கும் பொருந்தும். எதை எங்கு பேசுவது எப்படிப்பேசுவது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும். ஒரு பாராட்டுக் கூட்டத்தில், பாராட்டப்படுபவனைப் பற்றி ஒரு பேச்சாளர் பேசும் போது, சிறு வயது முதலே அவனைப் பற்றி அறிந்தவராக, அதிக உரிமை உடையவராக எண்ணிக் கொண்டு, அவன் சிறு வயதில் செய்த தவறுகளைப் பெரிது படுத்திப் பேசுவது எவ்வளவு தவறான செயல் என்பதை எண்ணிப் பாருங்கள். அவன் மனது எவ்வளவு புண்படுமென்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா ?
நண்பர்களே ! காக்க வேண்டியவற்றில் எவற்றைக் காக்காவிட்டாலும் நாவை மட்டுமாவது அடக்கியாளக் கற்றுக் கொள்ள வேண்டும்.
நா காக்க !
அன்புடன் ..... சீனா
-------------------------