ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Sunday 26 October 2008

மலரும் தீபத் திருநாள் நினைவுகள்

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

என்னுடைய சிறு வயது ( 1963-66 - வயது : 13-16) தீபாவளியை, தமிழ்ச்சங்கம் வளர்ந்த தன்னிகரில்லா மதுரையில், கொண்டாடிய மலரும் நினைவுகளை வலை உலக அன்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

தீபாவளி என்பது சிறுவர்களுக்கு மகிழ்வைத் தரும் ஒரு விழா. அன்றைய தினம் அதிகாலை எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை உடுத்தி, சர வெடிகள் வெடித்து, பலகாரங்கள் உண்டு, கோவிலுக்குச் சென்று இறைவனைத் தொழுது, இன்பமாக இருக்க ஒரு வாய்ப்புக் கிடைக்கும்.

எங்கள் வீடு ஒரு கூட்டுக் குடும்பம். தாத்தா, பாட்டி, தாய், தந்தை, தமயன், தம்பியர், தங்கையர் எனப் பலரும் கூடி வாழ்ந்த ஒரு பெரிய குடும்பம். தீபாவளி அன்று, தாயும் பாட்டியும் அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் எழுந்து பலகாரம் செய்ய ஆரம்பிப்பார்கள். முடிப்பதற்கு மதியம் ஒரு மணி ஆகி விடும். நாங்கள் சிறுவர்கள் மெதுவாக ஒருவர் பின் ஒருவராக, காலை நான்கு மணியிலிருந்து, எழுந்து எண்ணெய் தேய்த்து, தூக்கக் கலக்கத்துடன் சுடு தண்ணீரில் குளித்து விட்டு துண்டைக் கட்டிக்கொண்டு காத்திருப்போம்.

எங்கள் அப்பா எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, மலை போல் குவிந்திருக்கும் புத்தாடைகளுக்கு, மஞ்சள் வைத்து, பூசை செய்து, பலகாரங்கள் படைத்து, இறை வணக்கம் செய்துவிட்டு ஒவ்வொருவராக கூப்பிட்டு புத்தாடைகள் கொடுப்பார்கள். காலில் விழுந்து வணங்கி பெருமையுடன், பொறுமையாக பெற்றுக் கொள்வோம். அவைகளை அணிந்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயார் ஆவோம்.

அப்பாவும் புத்தாடை அணிந்து, ஒரு பெரிய சரவெடியினைக் கொளுத்தி, வெடித்து கொண்டாட்டங்களை அடையாள பூர்வமாக ஆரம்பித்து வைப்பார்கள். பின் நாங்கள் அனைவரும் வெடிகளை வெடிப்போம். காலை ஆறு மணி வரை, முடிந்த வரை வெடிப்போம். பின் அனைவரும் அமர்ந்து பலகாரங்கள் சாப்பிட்டுவிட்டு, கோவிலுக்குச் செல்ல தயாராவோம். அப்பா அனைவரையும் அழைத்துக் கொண்டு ( தாயார், தாத்தா, பாட்டி நீங்கலாக) புதூரிலிருந்து சிம்மக்கல் வரை பேருந்தில் அழைத்துச் செல்வார்கள்.

பழைய சொக்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பிறகு மீனாட்சி அம்மன் கோவில் செல்வோம். அங்கு, விபூதிப் பிள்ளையாரை வழிபட்டுவிட்டு, முக்குறுணிப் பிள்ளளயாருக்கு துண்டு சார்த்தி, வழி பட்டு, அம்மன் சன்னதி சென்று அர்ச்சனை செய்வோம். இப்போதிருக்கும் கூட்டமெல்லாம் அப்போது இல்லை. அனவரின் சார்பிலும், அப்பா கம்பீரமாக, அர்ச்சனை சுவாமி பெயருக்கே செய்யச் சொல்வார்கள். பிற்காலத்தில் தான் தெரிந்தது அத்தனை பேரின் பெயர்களும் நட்சத்திரங்களும் நினைவில் வைத்துக் கொள்வதின் சிரமம் கருதித்தான் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்தோம் என்பது. ஆனால் அந்தப் பழக்கம், என் குடும்பம் அளவான குடும்பமாக இருப்பினும், இன்னும் தொடர்கிறது.

அடுத்து சுவாமி சன்னதி. வெளியில் வந்து சனீஸ்வரர், அனுமார், காலைத் தூக்கி ஆனந்த நடனம் புரியும் சிவ பெருமான், அன்னை உமையவள் அனைவரையும் வழி பட்டு திரும்புவோம். நடனம் புரியும் இறைத் தம்பதிகளின் மேல் வெண்ணை சாத்துவது என்பது எல்லோருக்கும் பிடித்த ஒன்று. சிலைகளின் உயரத்திற்கும் எங்கள் உயரத்திற்கும் சம்பந்தமே இருக்காது. வெண்ணையைத் தூக்கி சிலைகளின் மீது எறிவோம். அது எங்கு வேண்டுமானாலும் இலக்கின்றி பறந்து சென்று அமர்ந்து கொள்ளும். இன்று வரை சரியாக சிலைகளின் மீது எறிந்ததாக சரித்திரம் இல்லை. தற்போது வெண்ணை சாத்தும் பழக்கம் நிறுத்தப் பட்டு, நெய் விளக்கு ஏற்றும் பழக்கம் கடைப் பிடிக்கப் படுகிறது.

மீனாட்சி அம்மன் கோவில் பிரசாதம் வாங்கி அனைவரும் தலைக்கு கொஞ்சமாக உண்டு மகிழ்வோம். பின் அங்கிருந்து கிளம்பி நகரத் திரை அரங்கு ஒன்றில் காலைக் காட்சி (10 மணிக் காட்சி) அனைவரும் பார்த்துவிட்டு மதியம் சாப்பாட்டிற்கு வீடு திரும்புவோம். முன்பதிவு என்பதெல்லாம் இல்லாத காலமது. நினைவில் நிற்கும் திரை அரங்குகள் தங்கம் (மிகப் பெரிய அரங்கு), ரீகல் ( பகலினில் நூலகம் - இரவினில் திரை அரங்கம்), இம்பீரியல், கல்பனா, சிந்தாமணி, செண்ட்ரல், நியூ சினிமா, பரமேஸ்வரி முதலானவை.

இதில் பரமேஸ்வரியில் ஆங்கிலப் படங்கள் மட்டுமே திரை இடப்படும். தீபாவளி அன்று திரைப் படம் பார்க்கும் பழக்கம் பல ஆண்டுகளுக்கு நீடித்தது. எங்கள் அனைவருக்கும் புத்தாடை எடுப்பது என்பது ஒரு பெரிய நிகழ்வு. அப்பா, அம்மா, தமயன், நான், நால்வர் தான் செல்வோம். அக்கால ஜவுளிக் கடை - அல்ல - கடலில் ( ஹாஜிமூசா) தான் பெரும்பாலும் துணி எடுப்போம். ஆண்கள் அனைவருக்கும் ஒரே மாதிரி, சட்டைக்கும், அரை ட்ராயருக்கும் துணி எடுப்போம். பனியன் மற்றும் உள்ளாடைகள், பெண்களுக்கு சேலை, பாவாடை, தாவணி, மற்றும் உள்ளாடைகள் ஆகியவை வாங்குவோம்.

ஒரு மாத காலம் முன்பாகவே துணி வாங்கும் படலம் தொடங்கும். கடையில் இருந்து வீட்டிற்கு வருவதற்கு முன்னாலேயே, கோரிப்பாளையத்தில் கோல்டன் தையலகத்தில் தைக்கக் கொடுத்து விடுவோம். தைத்து வந்த பிறகு தான் மற்றவர்கள் பார்க்க முடியும். தீபாவளி அன்று மட்டும் தான் அத்துணிகள் அவரவர்க்குச் சொந்தம். பிறகு எந்தத் துணி யாருடையது என்று யாருக்குமெ தெரியாது. பொதுவாக அனைத்துமே ஒரே அளவில் தான் இருக்கும். யார் வேண்டுமானாலும் எதை வேண்டு மானாலும் போட்டுக் கொள்ளலாம்.

வெடிகளும் இனிப்புப் பலகாரங்களும் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னரே அப்பா வாங்கி வருவார்கள். என்ன வாங்கி வந்தார்கள் என்பது பரம ரகசியம். தீவாவளிக்கு முந்தைய இரவு அனைவருக்கும் சமமாக வெடிகள் பிரித்துக் கொடுக்கப் படும். அவ்வெடிகளைப் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் ரகசியமாக பத்திரமாக பாதுகாப்போம். ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் கொள்ளை அடிப்பதும், சண்டை போடுவதும், களவு போனதா இல்லையா என்பது கூடத் தெரியாமல் அடித்துக் கொள்வதும், பின் சமாதான உடன்படிக்கை செய்வதும் நினைக்க நினைக்க இன்பம்.

ஒருவரை ஒருவர் நம்ப மாட்டோம். கணக்குத் தெரியாது. யார் தீபாவளி யன்று வெடி வெடித்தாலும் அனைவருமே அவ்வெடி தன்னுடைய பங்கிலிருந்து தான் திருடப்பட்டது என்று மனப்பூர்வமாக நம்புவோம். உடனே அடி தடி சண்டை தான். பெரியவர்கள் குறுக்கிட்டு இரண்டு போடு போட்டு இருவருமே அழத் தொடங்கி அவரவர்களுக்குப் பிடித்த பெரியவர்களிடம் சென்று ஆறுதல் பெற்று, அவர்களின் பங்கிலிருந்து (???), நிவாரணம் பெற்று மகிழ்ந்ததும் அக்காலமே.

மறு நாள் அனைவருமே அம்மஞ்சள் மாறாத புத்தாடைகளை பெருமையுடன் அணிந்து, ராஜ நடை போட்டு பள்ளிக்குச் சென்று நண்பர்களுக்குக் காண்பித்து, ஒப்பு நோக்கி, உயர்வு தாழ்வு கண்டு, மகிழ்ந்தது தற்கால மழலையர் முதல் இளஞர் வரை இழந்த ஒன்று. அக்காலத்தில், விழாக்களின் கொண்டாட்டங்கள், அதனால் விளையும் மகிழ்ச்சிகள், குதூகலமாக, கூட்டமாக திரைப் படம் பார்த்தது, ஒன்றாக உண்டது, ஒன்றாக விளையாடியது, ஒன்றாக உறங்கியது, அனைத்துமே இக்காலத்தின் கட்டாயத்தில் இழந்த நட்டங்கள்.

தீபாவளி அன்று வீட்டிற்கு வரும் உறவினர்களில் பெரியவர்கள் அனைவரின் காலிலும் விழுந்து கும்பிட்டு, ஆசிகள் பெற்று, அத்துடன் காசுகளும் பெற்றதும் உண்டு. காசுக்காகவே சும்மா சும்மா காலில் விழுவோம். பரிசுகளோ ஆசிகளோ பெரியவர்களிடம் பெறும் போது காலில் விழுந்து வணங்கும் நல்ல பழக்கம் இன்றும் தொடர்கிறது.

மலரும் நினைவுகளாக அசை போட்ட நிகழ்வுகள், திரும்ப இளமைப் பிராயத்திற்குச் செல்லும் வசதி இல்லையே என நினைக்கத் தூண்டுகிறது.

---------------------------------------------

Tuesday 21 October 2008

வள்ளுவம் வாழ்வின் வழி காட்டி


மாநில அளவில் ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ் நடத்திய பாரதி - வள்ளுவர் விழாவின் தொடர்பாக நடந்த பேச்சுப் போட்டியில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ஆர்.வெங்கட்ராமன் அவர்களிடம், பள்ளிக்கான சுழற் கேடயமும், போட்டியாளர்க்கான பண முடிப்பும், பெற்ற என் செல்ல மகளின் பேச்சு.
( 1993)





-----------------------------------------------------------------------------------------------

நடுவர் உள்ளிட்ட அவையினரை வணங்கி மகிழ்கிறேன்.



இந்த உலகத்தில் எந்த ஒரு மனிதனும் எதையும் எளிதில் வேதம் என்று ஒத்துக் கொள்ள மாட்டான். ஆனால் உலகம் முழுவதும் ஒன்றை பொது மறையாக ஏற்றுக் கொண்டுள்ளதென்றால் உண்மையில் அந்த மனிதனின் சிந்தனை பாராட்டுக்குரியதே ! பாயில் படுத்து நோயில் விழும் மனித வாழ்க்கையில் இன்பங்கள் சேர்க்கவும் துன்பங்கள் நீக்கவும் துணை புரிவது வள்ளுவமே ஆகும். உண்மையில் அந்நூல் வாழ்வின் வழி காட்டியே !



மனிதனாகப் பிறந்தவன், அன்போடு வாழ வேண்டும் ! அறிவோடு திகழ வேண்டும் ! பகுத்தறிவோடு பழக வேண்டும் ! பண்பில் உயர வேண்டும் ! புனிதனாய் மாற வேண்டும் ! வாழ்வில் உயர்வதற்கு இவை மட்டும் போதாது - அவன் உண்மையைப் பேச வேண்டும் ; பொய்மையை நீக்க வேண்டும் ; நட்பில் உயர வேண்டும் ; நல்லதைக் கொள்ள வேண்டும் ; அல்லதைத் தவிர்க்க வேண்டும் ; வையத்து வாழ்வாங்கு வாழ வேண்டும் !



இன்றைய சமுதாயத்தில் மனிதன் அன்பின்றி, அறிவின்றி, நட்பின்றி, நேர்மையின்றி, நன்னெறியின்றி, வாழும் முறை தவறி, வழி காட்டும் துணையின்றித் தட்டுத் தடுமாறுகின்றான். அதற்கு வள்ளுவம் காட்டும் வழி தான் என்ன ?




அன்பாயிரு - அதற்காக நீ வருந்த வேண்டியதில்லை !

இன்சொல் பேசு - இதற்காக உன் நா துன்பப்படுவதில்லை !

பொறுமையாயிரு - அது உன்னைப் பொன் போல் உயர்த்தும் !

எதிரியை எளிதில் நம்பி விடாதே !

பகைவனின் கண்ணீரைப் பார்த்து பக்கம் சாய்ந்து விடாதே !

வணங்கும் கைகளுக்குள் வாளும் மறைந்திருக்கும் !

சொல் வேறு செயல் வேறு பட்டார் தொடர்பு கொள்ளாதே !

அது கனவிலும் இன்னாது !

வலிமை அறியாது வாள் வீசாதே -அது உன்னையே வீழ்த்தி விடும் !

கூற்றத்தைக் கைதட்டி அழைத்து ஆக்கத்தை இழக்காதே !

அன்பில் உயர்ந்து நில் !

என்பும் பிறர்க்கென்று சொல் !

வெற்றுடலாய் நடமாடி வேடிக்கைப் பொருளாகி விடாதே !


என்றெல்லாம் வள்ளுவம் காட்டும் வழி நாம் வாழ்வில் உயர

நல் வழியே !




அடுத்து அறிவு ! அது அற்றங்காக்கும் கருவி ! பகைவராலும் உள்ளழிக்கலாக அரண் என்று வள்ளுவர் அதற்குத் தரும் விளக்கம் அழகானது ! எப்பொருள் எத்தன்மைத் தாயினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு ! எதிரதாக் காக்கும் அறிவினார்க்கில்லை அதிர வருவதோர் நோய் - என்பதெல்லாம் அறிவிற்கு வள்ளுவர் தரும் முடிவு !




சிந்தித்துச் செயல்படு ! வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் ! அதனால் வெள்ளம் வருமுன் அணை போடு ! என்று அவர் நம் வாழ்க்கைக்குத் தரும் எச்சரிக்கை - நல்வாழ்வுப் பாதைக்கோர் பச்சை விளக்கு ! இன்னும் அவர் கூறும் வாழ்க்கை விளக்கங்கள் நம்மை எல்லாம் மெய் சில்ர்க்க வைக்கின்றன !



கற்றதைச் சொல்லாதவன் காகிதப்பூ ! அறிவில்லாதவனின் அழகு மண்ணால் செய்த மாண்புறு பாவை ! கற்றறிவின்றி ஆன்றோர் அவைபுகல் எல்லைக் கோடின்றி விளையாடும் விளையாட்டு ! கற்றிருந்தால் நீ மனிதன் ! இல்லையெனில் விலங்கு ! நெஞ்சுரம் இருந்தால் நீ மனிதன் ! இல்லையெனில் மரம். இப்படி அவர் அறியாமையைச் சாடி அறிவைப் புகட்டி வாழ்வுக்குத் தரும் விளக்கம் - அது மனித வாழ்க்கைக்கோர் கலங்கரை விளக்கம் !




அடுத்து அன்பு - அது வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவை. அந்த அன்பில்லாதாவன் என்புதோல் போர்த்திய விலங்கு ! அவனால் பயன் ஒன்றுமில்லை ! மனிதனின் அன்பு விருந்தினை மென்மையாக நோக்க வேண்டும் ! அது உலகத்தோடு ஒட்டி உறவாட உதவ வேண்டும் ! உள்ளத்தே பொங்கி எழும் சினத்தை அடக்க வேண்டும் ! இன்னா செய்தார்க்கும் இனியவே செய்தல் வேண்டும் ! இன்பத்துள் இன்பம் விழையாது துன்பத்துள் துன்பம் துடைக்க வேண்டும் ! அன்பால் ஆண்டவனைப் பணிய வேண்டும் ! அவன் ஆதி பகவன் ! அறவாழி அந்தணன் என்று அவர் ஆன்மீகத்திற்குத் தரும் விளக்கம் ஒன்றே போதும் அவர் சாதிச் சளுக்கறுக்கும் சான்றோர் என்பதற்கு ! சமயப் பிணக்கறுக்கும் ஆன்றோர் என்பதற்கு ! இதை விடச் சிறந்த வாழ்க்கை வழிகாட்டி வேறென்ன இருக்க முடியும் !




மனித வாழ்க்கையில் கொடுத்து வாழும் பண்பு உயர்வானது ! எனவே உன்னால் முடிந்தால் கொடு ! இல்லை எனில் அடுத்தவன் கொடுப்பதைத் தடுக்காதே ! அது பாவம் ! அந்தப் பாவம் தீர்க்க வழியே இல்லை !




சினம் கொள்ளாதே !

அது சேர்ந்தாரைக் கொல்லும் !

அறம் செய்ய நீ ஆன்றோனாக வேண்டாம் !

மனத்துக்கண் மாசிலனாகு - அது போதும் !

கொல்லா நலத்தது நோன்பு !

பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு !

எதையும் ஏற்றுக் கொள் !

தோல்விகள் இயற்கை !

எவரிடமும் கை ஏந்தாதே - அது இழிவு !

முடியாதென்று முடங்கிக் கிடக்காதே !

தக்க காலமும் இடமும் அறிந்து செயல்படு - இந்த உலகத்தையே உன்னால் பெற முடியும் !

இதனை இதனான் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடு !

தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும் !

எனைவகையான் தேரியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் !




சிந்தித்துச் செயலாற்று !

ஒழுக்கம் தவறாதே !

சொன்ன சொல் பிறழாதே !

அன்பாயிரு !

அறிவாயிரு !

பண்பாயிரு !

வெற்றி கொள் !

வேடந்தவிர் !

செய்தொழில் போற்று !

சோம்பலை அகற்று !

கொடுத்து வாழ் !

கெடுத்து வாழாதே !

உண்மை பேசு !

உயர்ந்து வாழ் !

அச்சமே கீழ்களது ஆசாரம் !

தன்மானம் இழக்காதே !

தன்னிலையில் தாழாதே !

தாழ்வு வந்துழி உயிர் வாழாதே !

வறுமையை நினைத்து துவளாதே !

வாய்ப்புகள் இருக்கு தயங்காதே !




இப்படி எல்லாம் வள்ளுவன் காட்டும் என்னை எங்கேயோ இழுத்துச் செல்கின்றது !




நீ ஒராண்டு திட்டமிட்டால் தானியங்களை விதை !

நீ பத்தாண்டுகள் திட்டமிட்டால் மரங்களை நடு !

நீ நூறாண்டுகள் திட்டமிட்டால் மனிதர்களை உருவாக்கு - என்றான் ஓர் அறிஞன். ஆனால் வள்ளுவனோ ஆயிரம் ஆண்டுகள் திட்டமிட்டு ஆன்றோர்களை அல்லவா உருவாக்கி உள்ளான். அதனால் தான் அவன் தெய்வப்புலவன் திருவள்ளுவன். அவன் வள்ளுவமும் குன்றின் மேலிட்ட விளக்கு ! இந்தக் குன்றின் மேலிட்ட விளக்குக்கு நம் குவலயமே சாட்சி ! இந்த ஒரு மாட்சிமை போதாதா தெய்வப் புலவரின் திருவள்ளுவத்திற்கு !




வாருங்கள் தீபத்தை ஏற்றுவோம் ! திருக்குறள் போற்றுவோம் ! உள்ளிருள் நீக்குவோம் !




வருகிறேன் !

வாய்ப்பிற்கு நன்றி !

வணக்கம் !


--------------------------------------------------------

ஆக்கம் : செல்வி ஷங்கர்


ஒலிவடிவம் :





------------------------------------------------------

Sunday 19 October 2008

உதவும் நல்ல உள்ளங்கள் உதவலாம்.

அன்பினிற்குரிய நண்பர்களே !!

எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலை இத்துடன் இணைத்திருக்கிறேன் சென்னையில் உள்ள நண்பர்களை உதவுமாறு வேண்டுகிறேன்.

நன்றி

மின்னஞ்சல் :

Dear Friends,

Greetings from S. Mathew, Loyola College. Loyola College supports the education of 65 visually challenged students. I would kindly invite you to join hands with us to help the students with their 1st Semester exams which are due by November.

Exam Dates:

3rd – Nov to 18th Nov, 08. (Except on Sunday, 9th and 16th Nov.) Exam Time:

1st Secession 9.00 to 12.30pm 2nd Secession 1.00 to 4.30pm Exam Papers:

TL & FC – TAMIL PAPER
EL, SO, HT & EC – ENGLISH PAPER
CO & BU – COMMERCE PAPER
LH – Hindi Paper

Exam Venue:

Loyola College, MF – 01, Main Building 1st Floor, Nungambakkam, Chennai – 34

For any further clarifications, please contact

S. Mathew, Coordinator 9444223141
Email:
smathew27@gmail.com

NOTE: SUBJECT TITLE AND CODE NUMBER SEND VERY SOON.

Thanks & regards
S. Mathew

-- S. Mathew
Loyola College
Chennai – 600 034.
Ph: 9444 22 3141
ForwardSourceID:NT00003616
--------------------------------------------------------------------------
அன்புடன் ..... சீனா
http://cheenakay.blogspot.com/