ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Tuesday 27 November 2007

மதுரைப் பதிவர்களின் கவனத்திற்கு

சகோதரி அனுராதாவுடன் ஒரு சந்திப்பு

அன்பார்ந்த சக வலைப் பதிவர்களே!!

அன்பர் ஓசை செல்லாவின் பதிவின் மூலமாக சகோதரி அனுராதா சென்னையிலிருந்து மதுரை வந்து விட்டதாகவும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில் சேர்ந்திருப்பதாகவும் அறிந்தேன்.

இடுகையைப் படித்த உடன் அவரது அலை பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். அவரது அன்புக் கணவர் அலை பேசியில் அழைத்து விபரங்கள் கூறினார். அறை எண் 313ல் இருப்பதாகவும் கூறினார்.

26ம் தேதி, திங்கட்கிழமை காலை மருத்துவ மனைக்குச் சென்று நானும் எனது மனைவியும் சகோதரி அனுராதாவைச் சந்தித்தோம்.

சமீப காலப் பின்னடைவுக்குப் பின்னர் சற்றே தேறியுள்ளார். சர்க்கரை பாடாய்ப் படுத்துகிறது. தற்போது நோய் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது என்றும் அறிந்தோம். இங்கு ரேடியேஷன் மற்றும் கீமோதெரபி சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

சகோதரி இப்போது நடக்கவும் கை கால்கள் அசைக்கவும் பேசவும் செய்கிறார். உடல் நலம் தேறி இருக்கிறார். மன வலிமை கூடி இருக்கிறது.

அன்புக் கணவர் அருகிலேயே இருந்து கவனமுடன் கவனித்துக் கொள்கிறார். ஒரு மகள் சென்னையிலும், மற்றொரு மகளும், மகனும் சிங்கப்பூரிலும் வசிக்கிறார்கள் என அறிந்தோம். சென்னையை விட்டு நிரந்தரமாக சொந்த ஊரான மதுரைக்கு வந்து விட்டதாகவும், வில்லாபுரம் பகுதியில் குடியேறப் போவதாகவும் கூறினார்கள்.

கடந்த 4/5 ஆண்டுகளாக புற்று நோயுடன் போராடிக் கொண்டிருக்கும் சகோதரி, அதனைப் பற்றியும், அதனால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றியும் விரிவாக அவரது பதிவினில் எளிமையாக எழுதி உள்ளார். படித்தது பள்ளிப் படிப்பு மட்டும் தான் என்றாலும், எண்ணங்கள், கருத்துகள், மொழி நடை அனைத்தும் எளிமையாக எல்லா மகளிருக்கும், ஒரு விழிப்புணர்வைத் தூண்டுவதாக அமையும் வண்ணம் எழுதி இருக்கிறார்.

மகளிர் மார்பகப் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு மகளிரிடம் கொஞ்சமும் இல்லையே என்ற வருத்தம் அவரிடம் மேலோங்கி நிற்கிறது. படித்த மக்களிடம் கூட இவ்வுணர்வு இல்லையே என்றும், அரசு இவ்வுணர்வைத் தூண்ட எவ்வித முயற்சியும் செய்ய வில்லையே என்றும் மனங்கலங்குகிறார்.

இக்கொடிய நோயைப் பற்றிய அத்தனை செய்திகளையும் அனைத்து மகளிரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் - அதற்கு ஏதாவது திட்ட வட்டமாகச் செய்ய வேண்டும் என ஒரு தீவிர சிந்தனையில் இருக்கிறார். அன்புக் கணவரும் அருமை மக்களும் அன்பு செலுத்தி பக்க பலமாக இருந்து அவரது எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்கின்றனர்.

சக வலைப் பதிவர்கள் காட்டும் அன்பினையும், அவருக்காகச் செய்யும் பிரார்த்தனைகளையும், மழலைச் செல்வங்களின் மாசற்ற ஆதரவினையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

மதுரைப் பதிவர்கள் அனைவரையும், ஒரு முறை அவரைச் சென்று சந்தித்து, உடல் நலம் விசாரித்து, நோயை எதிர்த்துப் போராடும் மனத் துணிவினைப் பாராட்டி, அவரது எண்ணங்களைச் செயல் படுத்த - தேவைப் படின், ஆலோசனைகள் கூறி, மன ஆறுதல் அளித்து வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.

எல்லாம் வல்ல இறைவனை, அவரது எண்ணங்களைச் செயல் படுத்த, அவருக்குத் தேவையான கூடுதல் மனவலிமையையும், பூரண உடல் நலத்தையும் அளிக்க, மனங்கசிந்து வேண்டுகிறோம்.

அலை பேசி எண் : 98404 56066

அன்புடன் சீனா - செல்வி ஷங்கர்.

26.11.2007