ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Sunday 2 October 2011

காந்தி ஜெயந்தி - மதுரை மாவட்ட ஆட்சியர் திரு சகாயம் சிறப்பு பேச்சாளர்


இன்று அக்டோபர் இரண்டாம் நாள். மகாத்மா காந்தி பிறந்த நாள். முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாள். கர்ம வீரர் காமராஜ் நினைவு நாள்.
மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில், மகாத்மாவின் 142வது ஜெயந்தி விமரிசையாகக் கொண்டாடப் பட்டது. இவ்விழாவில் சிறப்புப் பேச்சாளராக மதுரை மாவட்ட ஆட்சியர் திரு சகாயம் அவர்கள் கலந்து கொண்டு பேசிய பேச்சின் சாராம்சம்.

தெளிவான சிந்தனையுடன், அழகான தமிழ்ச் சொற்களுடன், அருமையான நிகழ்வுகளின் வர்ணனைகளுடன், மருந்துக்குக் கூட ஒரு ஆங்கிலச் சொல் கலக்காமலும், சிறந்த ஒலியுடனும், உச்சரிப்புடனும், கம்பீரமான தோற்றத்துடனும், பிரமிக்கத்தக்க நினைவாற்றலுடனும் திரு சகாயம் அவர்கள் ஆற்றிய உரை பார்வையாளர்களைப் அமைதியுடனும், அசையாமலும் இருக்கச் செய்தது.

உள்ளாட்சித் தேர்தல் பணிகள் துவங்கி, நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் அவரது பேச்சுபொதுவாக காந்திய சிந்தனைகளை முன்னிலைப்படுத்தியும், மதுரை மாவட்டத்தையும் - அங்கு அவரது செயல்களையும் பற்றியே இருந்தது.

ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த காலத்திலேயே கிராமப்புறங்களில் நிலம் தொடர்பான ஆவணங்களும், நில வரிகள் வசூலிப்பும் மாவட்ட ஆட்சியரின் அதிகாரத்தில் தான் இருந்தது. அது அப்படியே இன்றும் தொடர்கிறது. அலுவலர்கள் கிராமந்தோறும் சென்று பிரச்னைகளை அங்கேயே தீர்த்து வருவதும் நடக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப் பட்டதனால் - தேர்தல் தொடர்பான அலுவலர்கள் கிராமங்களிலேயே இருக்க வேண்டும் எனவும் ஏற்படும் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்கவும், தேவை எனில் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு வரவும் அறிவறுத்தப் பட்டிருக்கின்றனர்.

வாக்காளர்களுக்கு பணம், இலவச அன்பளிப்புகள், விருந்து வேட்பாளர்களின் சார்பில் வழங்கப்பட்டால், தேர்தல் ஆணையத்தின் வழி காட்டுதலின் படியும், தமிழகத் தேர்தல் ஆணையரின் அறிவுரைகளின் படியும் - தேர்தல் விதிமுறைகளின் படியும் அவை குற்றமாகக் கருதப்பட்டு- உடனடியாக குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அலுவலர்கள் அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள்.

ஒரு நேர்மையான தேர்தல் நடைபெறும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை,


"இலஞ்சம் தவிர்த்து - நெஞ்சம் நிமிர்த்து " என்ற செய்திப் பலகையினை தன் அறையில் தன் இருக்கைக்கு மேலே மாட்டி வைத்திருக்கும் இவரைப் பாராட்டச் சொற்களே இல்லை. எந்நிலையிலும் மனச் சாட்சிப்படிப் பணியாற்ற வேண்டும் என்ற வேகம் அவரது புயல் வேகப் பேச்சிலிருந்தது. அவரது எளிய தோற்றம் மற்றும் மிடுக்கான ஆற்றல் திறன் அவரை ஒரு வரலாறு படைக்கும் மனிதராக ஆக்குகிறது.


திரு சகாயம் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த போது நடந்த இரு சம்பவங்களையும் அவரது உரையில் எடுத்துரைத்தார்.

ஒரு தடவை அவர் நெடுஞ்சாலையில் அவரது வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, இரு இளைஞர்கள் அவரது வாகனத்தின் முன்பு - சாலையில் தாறுமாறாக வாகனத்தை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தனர். அதைப் பார்த்த இவர் அவர்களை நிறுத்தி - அதிகாரிகளைக் கொண்டு, வாகனம் ஓட்டும் உரிமம் அவர்களிடம் இருக்கிறதா என்றும், அவர்கள் மது அருந்தி இருக்கிறார்களா எனவும் சோதனை இடச் சொல்லி இருக்கிறார். அவர்களிடத்தில் தகுந்த உரிமம் இல்லை எனவும், அவர்கள் மது அருந்தி இருக்கிறார்கள் எனவும் அதிகாரிகள் கூற, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார்.

உடனே அவ்விரு இளைஞ்ர்களில் ஒருவன் இவரை அணுகி ஒரு நூறு ரூபாய் நோட்டினை இவரிடம் நீட்டி - சார் இனிமே பண்ண மாட்டோம் சார் இப்போ
அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க சார்னு கூறினானாம். இலஞ்சத்திற்கு எதிராகப் போராடும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கு ஒரு இளைஞன் 100 ரூபாய் இலஞ்சம் இயல்பாகக் கொடுக்க முயல்கிறான் என்றால் - நம் நாடு இலஞ்சத்தில் எவ்வளவு தூரம் புரையோடிப் போய் இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

மற்றுமொறு சம்பவத்தினையும் அழகாக எடுத்துரைத்தார்.

இவர் வழக்கமாக கிராமங்களில் குறை தீர்க்கும் நாளன்று அங்கேயே தங்கி - குறைகளைக் கேட்டறிந்து, அலசி ஆய்ந்து, தீர்வுகளும் கூறி, குறைகளை அங்கேயே தீர்க்கும் வழக்கமுடையவர். அது போல் ஒரு நாள் இரவு முழுவதும் பொது மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, தகக நடவடிகைகள் எடுத்து விட்டு, அதிகாலையில் கிராமத்தினை விட்டுப் புறப்பட்டுச் செல்லும் வழியில் ஒரு இடத்தில் ஒரு கணவன் மனைவி இருவரும் பருத்தி பறித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து - என்ன இது - ஒரு மாவட்ட ஆட்சியர் கிராமத்து மக்களின் குறைகள் தீர்க்க கிராமத்திற்கே நேரில் வந்து - தங்கி - குறைகளைத் தீர்த்து, அங்கிருந்து செல்லும் வரை இவர்கள் எதனைப் பற்றியும் கவலைப்படாமல் அவர்களது உழைப்பிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களே என வியந்து அவர்களை அழைத்து, என்ன குறை ஒன்றும் இல்லையா எனக் கேட்க, அவர்களும் ஒன்றும் இல்லை என்றும் - எங்கள் வேலைகளைச் செய்கிறோம் எனக் கூற, இவரும் கருமமே கண்ணாய் இருந்த அவர்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பினார்.

கணவனோ ஆடை ஒன்றும் அணியாமல் ஒரு கோவணத்துடன் இருந்ததால் - புகைப்படம் எடுக்கத் தயங்க - இவர் வலியுறுத்தி புகைப் படம் எடுத்து - அப்படத்தினை அவரது மாவட்ட ஆட்சியர அலுவலகத்தில் = அவரது அறையின் முன்பு மாட்டி இருந்தாராம். இவர் இதுவரை எடுத்துக் கொண்ட புகைப்படங்களிலேயே - இப்படம் தான் இவரைக் கவர்ந்ததாகவும் - இவரது மனதிற்குப் பிடித்ததாகவும் இருந்ததாம்.

ஆக இவரது பேச்சும் இவரது செய்திகளும் மக்களை நன்கு சென்றடைந்தன.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா






Friday 12 August 2011

கழுகின் சுதந்திர தின சிறப்பு சிறகடிப்பில்....வெளியாகப்போகும்

அதிரடி கட்டுரைகள்,
செய்தி தொகுப்புக்கள்
பேட்டிகள்...

அனைத்தையும் ஆகஸ்ட் 13,14,15, 16ல் வாசியுங்கள்...! இனிய சுதந்திர தினத்தை கழுகோடு சேர்ந்து கொண்டாடுங்கள்...!


எல்லார்க்கும் நல்லின்பம்
எல்லார்க்கும் செல்வங்கள்
எட்டும் விளைந்ததென்று
கொட்டுமுரசே - வாழ்வில்
கட்டுத் தொலைந்ததென்று
கொட்டு முரசே!


kazhuhu 1.JPG


- கழுகு விவாதக் குழு

Sunday 29 May 2011

சீனா - ஒரு அறிமுகம்

அன்பு நண்பர்களே !

ஒரு குழும நண்பர்கள் சந்திப்பில் - சந்தித்தவர்கள் பற்றிய ஒரு இடுகை இட்ட போது - சீனா என்பவரைப் பற்றிய ஒரு அறிமுகமாக இது எழுதப்பட்டது.

சீனா .... சீனா

எப்போது இடி இடிக்கும் ?
இல்லை !
எப்போது மின்னல் மின்னும் ?
இல்லை !
எப்போது காற்றடித்து மழை பெய்யும் ?
இயற்கை யாருக்குத் தெரியும் ?
தெரிந்தாலே தேவ இரகசியம் இல்லை !

இதைப் போல சீனா !
அது என்ன சைனா
என்று அவ்வப்போது
கேட்கத் தோன்றும் !

சிரித்த முகம் - சிந்தும் புன்னகை - சிறப்பே !
இருந்தாலும் இந்தச் சினம்
அவ்வப்போது தலை காட்டும் !
அந்தி மலைச் சாரலாய் !
எவர்க்கும் தெரியாது
என்ன மனநிலை என்று !

செய்வதெல்லாம் செயலே ! ஆம்
செயல்களே வழி பாடாய் சீரிய வழியில் !
நான் படித்தேன் குறள் ! ஆனால்
அதன் பாதை எல்லாம் அவர் செயல் !

கொடுப்ப தென்றால் பிடிக்கும் !
கோபுரமாய் கொடுக்கவே
உள்ளம் இனிக்கும் !
இருந்தாலும் எவர்க்கும்
தெரியாது இயக்கம் !
மனதுக்கு மட்டுமே தெரியும் !

மலர்ந்து மணப்பதுவே பயன் !
சொல்லாமல் செய்கின்ற
சோர்வற்ற வேலைகள் பல !

சோதனையை சாதனையாக்கும்
தத்துவம் தெரியும் !
வளர் தொழிலில் வழி காட்டும் பாங்கு !
வருவார் முகத்தில் தெரிகின்ற நம்பிக்கை !
வாங்குகின்ற பெயரெல்லாம்
வலக்கரம் செய்கின்ற வலிமையால் !

இதற்கு இலக்கணம் இல்லை !
இலக்கியம் உண்டு !
ஊரறிந்த உவகையினை
உளமறிந்து உவந்ததுண்டு !
தூக்கி விட்டுத் துணையாகி !
எடுத்தியம்பி எளிமையாய் !
ஏற்றமுற போற்றுமொழி
சொல்லி எங்கும் இனிக்கவே
இதயம் விரும்பும் !

கடிதோச்சி மெல்ல நகும்
காரியந்தான் அனைத்தும் !
சொல்லச் சிறந்த வழி
எளிமை ! எதிலும் இயல்பு !
இனிப்பதுவோ இதய மொழி !

எப்படியும் செயலாற்றும் ஏகலைவன் !
ஏக்கங்கள் ! தூக்கங்கள்! எதிர்த்தாலும்
ஏணியை விடாத ஐங்கரன் துணை !
ஆளும் ஆனைமுகன் அன்பன் !
அனைத்திலுமே அடக்கி வாசிக்கின்ற ஆற்றல் !
இரக்கத்திற்கும் ! இதயத்திற்கும் !
இறைமைக்கும் ! இலகுகின்ற
இன்முகம் இந்தச் சீனா !


---------------------------------






Tuesday 3 May 2011

மாவட்ட ஆட்சியரின் உரை

01.05.2011 காலை 11 மணி அளவில் மதுரை படிப்பாளிகள் சங்கமத்தில் - மதுரை மாவட்ட ஆட்சியர் திரு சகாயம். IAS அவர்கள் "நல்ல குடிமகனை உருவாக்குவது" என்ற தலைப்பினில் ஆற்றிய உரையின் சுருக்கம்.

இவ்வுலகில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு முறையால் சிறப்புப் பெற்றிருக்கிறது. பொருளாதாராத்தில் சிறந்து விளங்குகிறது அமெரிக்கா. பொது உடைமைத் தத்துவத்தை உலகிற்குப் பரப்பியது இரஷ்யா. நிறைந்த மக்கட்தொகை கொண்ட மிகப் பெரிய நாடு சீனா. உழைப்பால் உயர்ந்து நிற்கும் உன்னத நாடு ஜப்பான். நம் இந்தியத் திருநாடோ மிகப் பெரிய மக்களாட்சி நடக்கும் நாடு. இதன் தேர்தல் முறையே இதற்குச் சான்று.

இந்த நாட்டிலே நல்ல குடி மக்களை உருவாக்குவது ஒவ்வொருவரின் கட்டாயக் கடமையாகும். பள்ளிகளில் கற்றுத் தரும் கல்வியோடு மாணவச் செல்வங்களுக்கு மனிதத் தன்மையினையும் கற்றுத் தர வேண்டும். கல்வி கற்பிப்பதோடு, நல்ல மனிதனை உருவாக்குவதும் ஆசிரியர்களின் பணிதான். நான் மருத்துவராவேன் - நான் பொறியியல் வல்லுனர் ஆவேன் - நான் இந்திய ஆட்சிப் பணியில் அமர்வேன் என்கின்ற இளம் உள்ளங்கள் நான் நல்ல மனிதனாவேன் என்று உணர்ந்து கூறுகின்ற அளவுக்கு ஆசிரியர்கள் அவர்களை உருவாக்க வேண்டும்.

அரசு ஊழியர்கள் - உழைத்தால் ஊதியம் வருகிறது. இது என் தொழில் - இது அதற்குரிய ஊதியம் என்பதை விட அத்தொழிலை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். மனம் உழைப்பதைக் கடமையாகக் கொண்டால் மட்டும் போதாது. கருணையோடு உழைக்க வேண்டும். இருட்டில் வெளிச்சத்தைத் தேடுவதைப் போல பகலிலும் இருண்ட வாழ்க்கை நடத்துவோருக்கிடையே உண்மையானவரைத் தேட வேண்டும்.

திரு சகாயம் ஒரு அரசு உயர் அதிகாரியாக இருந்த போதும், அவர் செயலில் இருக்கின்ற மனிதத் தனமை நம்மை மனம் நெகிழச் செய்கிறது. ஏற்றமிகு செயல் - எடுப்பான பேச்சு - நேர்மையான உழைப்பு - இவை அவரை உயர்ந்த மனிதராக்குகிறது. ஊழலும் கையூட்டும் மலிந்து விட்ட சமுதாயத்தைச் சட்டத்தால் திருத்த நினைக்கின்ற, இந்திய ஆட்சித்துறையினைச் சார்ந்த ஒரு அதிகாரி மனிதத் தன்மையோடு செயலாற்றுவது அவருக்கு ஒரு உயர்ந்த தோற்றத்தினை அளிக்கிறது.

தமிழ் எப்படி வளர்கிறது என்பதற்கு ஒரு அருமையான செய்தியைக் கூறினார். அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி கற்கும் ஏழை மாணவர்கள் தான் எதிர் காலத்தில் தமிழ் மொழியினை எல்லோரிடமும் கொண்டு சேர்க்கும் தொண்டினைச் செய்பவர்கள் என்ற செய்தியினைத் தெளிவாகக் கூறினார்.அதனால் தான் இவர், மற்ற பள்ளிகளை விட இப்பள்ளிகளின் மீது அதிக அக்கறை காட்டுவதாகக் கூறினார். நடக்கப் பழகுகின்ற குழந்தைகளைத் தானே கையைப் பிடித்து அழைத்துச் செல்வோம். நன்றாக நடப்பவர்களை அல்லவே !

சட்டடத்தினை உருவாக்கும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் அதை மீறுபவர்களாக இருக்கக் கூடாது. சட்டத்தினைக் கையில் வைத்துக் கொண்டு அதன் எதிர்ப் பக்கத்திற்குத் துணை போகக் கூடாது. நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும் என்று எப்படி இளநிலை இள வயது அதிகாரியாக இருக்கும் போது நினைத்தோமோ - அதனை பதவி உயர்வினிலும் நினைத்துப் பணியாற்ற வேண்டும். அப்படி ஒரு மன நிலையில் அரசு உயர் அதிகாரிகளைக் காண்பதரிது. "இலஞ்சம் தவிர்த்து - நெஞ்சம் நிமிர்த்து " என்ற செய்திப் பலகையினை தன் அறையில் தன் இருக்கைக்கு மேலே மாட்டி வைத்திருக்கும் இவரைப் பாராட்டச் சொற்களே இல்லை. எந்நிலையிலும் மனச் சாட்சிப்படிப் பணியாற்ற வேண்டும் என்ற வேகம் அவரது புயல் வேகப் பேச்சிலிருந்தது. அவரது எளிய தோற்றம் மற்றும் மிடுக்கான ஆற்றல் திறன் அவரை ஒரு வரலாறு படைக்கும் மனிதராக ஆக்குகிறது. அத்தகைய மனிதரின் நெஞ்சில் ஈரம் உள்ளது என்பது எவ்வளவு இனிமையான நினைவு !

பேச்சுக்குச் சொல்வதுண்டு - "நீ என்ன பெரிய கலெக்டரா ? " என்று. ஆம் ! கலெக்டர் என்றால் எதையும் சாதிக்க முடியும். அதனால் தான் "படிப்பாளிகளாகிய நீங்கள் ஒரு நல்ல சமுதாயத்தினை உருவாக்குங்கள்" என்றார். பயிற்சி பெற்றவர்களாகத்தான் பலர் இருக்கிறார்கள். ஆனால் படித்துணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். நல்ல சமுதாயத்தை உருவாக்குங்கள் என்றார்.

அவர் நாமக்கல் மாவட்ட ஆட்சியராகப் பணி புரிந்த போது அவர் செய்த நல்ல செயல்களை எடுத்துரைத்தார். உழைப்பாளர் தினத்தன்று ஒரு நல்ல உழைப்பாளியினைக் கண்ட நிறைவு எல்லோருடைய கண்களிலும் தெரிந்தது.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Wednesday 9 February 2011

அன்பிற் சிறந்த தவமில்லை.

Dear Sury,

To day the function went on well. Especially the lecture by the Chief Guest was wonderful and he mesmerised the audience and made the hall as PIN DROP SILENCE. My wife (SELVI SHANKAR - Nick name : MEYYAMMAI - real name ) has written a small note on his speech in TAMIL which is given below.

She is a blogger. She is a retired Tamil Teacher, after putting 34 years service from a famous school owned by INDIAN EXPRESS GROUP, chennai. The founder Ramnath Goyenka had started the school in his wife's name - MOONGIBAI GOYENGA GIRLS HIGHER SECONDARY SCHOOL at Chennai.

அன்பிற் சிறந்த தவமில்லை :

பிப்ரவரித்திங்கள் ஆறாம் நாள் ஞாயிறு அன்று மாலை 06:30 மணிக்கு, அரவிந்த் மருத்துவமனை அரங்கத்தில் மதுரை வாசகர் வட்டத்தின் ஆறாவது ஆண்டுவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அப்பொழுது சென்னையைச் சார்ந்த திரு கிருஷ்ண ஜெகநாதன் என்பவர் அன்பிற் சிறந்த தவமில்லை ( பாரதியின் சொற்கள் ) என்ற தலைப்பினில், ஏறத்தாழ 75 நிமிடங்கள் அழகு தமிழில், சிறந்த உச்சரிப்பினில், ஏற்ற இறக்கங்களுடன், பல எடுத்துக்காட்டுகளுடன், பாரதி, வள்ளூவன், கம்பன், எனப் பலரின் பாடல்களில் இருந்து அருமையான வரிகளை மேற்கோள் காட்டிப் பேசி, அவையோரைக் கவர்ந்தார்.
அவரது பேச்சினில் நான் உணர்ந்தவை இவை.

ஒரு நல்ல மாலைப் பொழுது, செவிக்கினியதாய், செந்தமிழின் சுவை நிறைந்ததாய், தெய்வத்தன்மை பொருந்தியதாய் அமைந்தது. அந்த அமிழ்தின் இனிய ஆன்ற பொழுது அண்டத்தைக் கண் முன்னே கொண்டு வந்தது. நாமும் நம் ஆசைகளும் நமக்கு எவ்வளவு பெரியதாய்த் தெரிகின்றன. ஆனால் உலகமும், சுற்றுக் கோள்களூம், கோள்களின் சுற்றுப் பாதைகளூம், நம் பூமியும், பூமியில் நம் நாடும், நம் இருப்பிடமும், அவ்விடத்தில் நாமும் என்றால் அந்த ஒரு புள்ளியிலும் புள்ளியாய் இருக்கின்ற நம்மில் தான் எத்தனை நினைவுகள் - நிகழ்வுகள்! அவை ஆசையாய் இல்லாமல் அன்பாய் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை, அழகாக, ஆழமாக, அருமையாக விளக்கினார்.

இந்த உலகத்தில் அன்பு - காட்டப்படவேண்டிய ஒரு உணர்வு. ஆசை கொள்ளுகின்ற மனிதன் வெளிப்படுத்துகின்ற உணர்வு அன்பு. அவ்வுணர்வு பரந்து விரிந்து அனைவரிடமும் செலுத்தப்படுகின்ற போது, உணர்வது அருள் வடிவாகின்றது. தனக்கு வேண்டும் என்று தன்னலங் கருதும் போது வெளிப்படுவதே ஆசை. பிறர்க்குக் கொடுத்து உதவுகின்ற போது தோன்றுவது அன்பு. அனைவரிடமும் செலுத்தப்படுகின்ற போது உணர்வது அருள். இவ்வுலகில் ஆசை உள்ளவன் மனிதன். அன்பு கொண்டவன் இல்லறத்தான். அருள் பெற்றவன் ஆன்றோன்.

உயிரற்ற பொருட்கள் விளம்பரப்படுத்தப்பட வேண்டும். உணர்வுகள், உறவுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அருள் உணரப்பட வேண்டும் - உணர்த்தப்பட வேண்டும். ஆனால் இன்றோ பொருட்கள் அறிமுகமும் உறவுகள் ஒதுக்கப்படுவதும் நடக்கிறது. மக்கள் ஆசைக்கு அடிமையாகி உறவுகளைத் துறந்தும் உணர்வுகளை வெளிப்படுத்தியும் இயந்திர மயமாகி உள்ளனர்.

அன்பு வீட்டிலிருந்து துவங்க வேண்டும். கணவன் - மனைவி - மக்கள் - பெற்றோர் - உடன் பிறந்தார் என்று படர வேண்டும். பின்னர் அயலார் நட்பு என்று விரிய வேண்டும். ஏழை - ஏதிலி என்று செயல்பட வேண்டும். நினைவு - சொல் - செயல் எல்லாம் ஒன்றாக இருந்தால் உலகம் உருப்படும். குடும்பம் - அயலார் - தம் ஊர் - தம்மக்கள் - தம் நாடு என்று அன்பு விரிய வேண்டும்.

குற்றம் கண்ட இடத்து சுட்டிக் காட்ட வேண்டும். தட்டிக் கேட்க வேண்டும். அகிம்சையைக் கையாள நல்ல உளவலிமை வேண்டும். அன்பு காட்ட, இரக்கம் காட்ட, வீரம் வேண்டும். அன்பு அறத்திற்கு மட்டும் துணையல்ல, மறத்திற்கும் அன்பு தான் துணை. அந்த அன்பு அறத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். அறத்தை அடிப்படையாயக் கொண்டது நம் நாடு. பாரத நாடு பாருக்கெல்லாம் திலகம் என்றான் பாவேந்தன் பாரதி. அறத்தை எடுத்துச் சொல்ல இந்த உலகில் உயர்ந்து நிற்கும் ஒரே நாடு நம் பாரத நாடு. நம் உணர்வு, உறவு, கலாச்சாரம், பண்பாடு - இவை தான் நம்மைப் பாரில் உயர்த்துவன. ஆனால் நம் பண்பாடு காலத்தால் தேய்ந்து கொண்டே வருகிறது.

தனி மனிதனின் வாசிப்பு அவனைத் திருத்துகிறது. அவன் மனத்தைத் திருத்துகிறது. சுற்றியுள்ள மக்களைத் திருத்துகிறது. இரக்கம் நம் உள்ளத்தில் பிறப்பது. ஏழை என்றாலும் ஏற்ற குணம் உண்டு. படிப்புத்தான் எல்லாவற்றையும் தருமென்றால் இன்றைக்கு, படித்தோர் மலிந்துள்ள நம் நாட்டின் நிலை என்ன ? பண்பாடு அழிந்து கொண்டிருக்கின்ற இளைய சமுதாயம் ஏன் ? வாழ்க்கையைப் படிக்கின்ற மக்கள் நம் நாட்டில் இருக்கின்றார்களா ? அதனால் தான் அன்றிருந்த நல்ல சமுதாயம் இன்றில்லை. மென்பொருள் வல்லுனர்கள் மலிந்துள்ள நம் நாட்டின் பண்பாடு எங்கேயோ போய்விட்டது. இவை எல்லாம் ஏன் ?

படிக்க வேண்டும் - நல்ல நூல்களை கைகளில் எடுத்துப் படிக்கும் போது நம் உள்ள உணர்வுகள் வெளிப்படும். பார்ப்பதாலோ கேட்பதாலோ அவ்வுணர்வுகள் காட்சி அளவில் தான் காணப்படும். கருத்துணர்ந்து படிக்கையில் காட்சிகள் உணரப்படும். அப்படி நூல்கள் படிக்கும் பழக்கத்தை வளரும் சமுதாயத்திற்கு அறிமுகப் படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் அன்புடையவர்களாக, அருளுடையவர்களாக வளர்வார்கள். நாடும் உலகில் உயர்ந்து நிற்கும். நாட்டுணர்வுக்கு அடிப்படை வீட்டுணர்வு. வீட்டுணர்வுக்கு அடிப்படை இறையுணர்வு. இறையுணர்வுக்கு அடிப்படை நல்ல நூல்களைக் கற்றுணரும் கல்வி உணர்வு. எனவே கற்க ! கற்பவை கற்க ! கசடறக் கற்க ! கற்ற பின் நிற்க ! நாட்டை நிலை நிறுத்துக ! நாடு வாழ நாமும் வாழ்வோம். -----


நல் வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Saturday 8 January 2011

ஈரோடு வலைப்பதிவர்கள் சங்கமம் 2010

ஈரோட்டினைச் சார்ந்த பதிவர்கள் குழுமம் சென்ற டிசம்பர் 26ம் நாள் ஞாயிறன்று - பதிவர்கள் வாசகர்கள் சங்கமம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அன்று ஏறத்தாழ நூறு பதிவர்கள் மற்றும் வாசகர்கள் வந்து கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் பொறுப்பாளர்கள் விருந்தினர்களை நன்கு கவனித்து, விருந்தோம்புதலை வெளிப்படுத்தினர். மதிய உணவு ஒன்றே போதும் அவர்களது விருந்தோம்புதுலக்கு. விழா நிகழ்ச்சிகளைப் பற்றிய ஒரு பார்வை :

ஈரோடு வலைப்பதிவர்கள் சங்கமம் ஒரு கலைப் பதிவாய்த் திகழ்ந்தது. கலை என்பது அறிவு - கலை என்பது ஆற்றல் - கலை என்பது கதை - க்லை என்பது காவியம் - கலை என்பது படைப்பு. அதுவும் அறிவாற்றலை வெளிப்படுத்தும் நுட்பம் என்றார்ப் போல் சிறுகதைகளை உருவாக்க எப்படிச் சிந்திக்க வேண்டும் - அந்த சிந்தனைக்கு ஏற்ற பயிற்சிகள் - அச்சிந்தனைத் துளிகள் எவ்வாறு கதை வடிவுக்குள் வரும் என்பதைத் தன் பயிற்சி வழிமுறைகளால் உரையில் வடித்தார் எழுத்தாளர் பெருமாள் முருகன். கேட்டவர்களுக்கு நிச்சயம் வலைப்பதிவில் சிறுகதைகள் படைக்கும் ஆர்வம் சற்றே எட்டிப் பார்த்திருக்கும்.

மொக்கைப்பதிவுகள் சிந்தனையின் சிகரத்தில் தோன்றுபவை. இயல்பான ஒன்றை அதன் நிலையிலேயே எடுத்துரைப்பது எல்லாராலும் இயலும். ஆனால் அதனைச் சற்று நகைச் சுவையோடு நற்கலைப்படுத்துவது என்பது சிறந்த முயற்சி உடையாருக்கே இயலும் என்பதை பாமரன் தன் கருத்தோட்டமாகப் பதிந்தார். செவி மடுத்தவர்கள் இதனைப் பற்றி சற்றே சிந்தித்திருப்பர்.

குறும்படங்கள் பற்றி அருணும் - திரைப்படங்கள் பற்றி சிதம்பரனும் - புகைப்படக் கலை பற்றி சுரேஷ்பாபுவும் - இன்றைக்கு நம் எல்லார் மனங்களிலும் இடம் பிடித்திருக்கும் இப்படக்கலை நுணுக்கங்களை எடுத்துரைக்கும் பொழுது வியப்பாய் இருந்தது. ஏதோ பொழுது போக்கு - அவர்களூக்குத் தெரிந்ததை தெரியாத நம்மிடம் கூறுகிறார்கள் என்ற எண்ணமே இன்றி படம் எடுத்துக் கொண்டிருப்பவர் களுக்கு வெளிச்சம் - தொலைவு - பொருள் - வடிவு என்ற எல்லைகளை எப்படி எப்படி எல்லாம் அமைத்தால் ஒரு நல்ல படத்தை எடுக்க முடியும் என்பதை இவர்கள் மிக நீளமாக, விளக்கமாக எடுத்துரைத்தார்கள் ! . ஏனென்றால் அவர்கள் `கூற வந்த எதையும் சுருக்க முடியாது. அதுவும் தொழில் நுட்ப விளக்கங்களோடு உரைத்தது படங்களை எடுக்க விரும்புபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது.

இணையமும் வலைப் பூக்களும், நிழற்படங்கள் வழி ஆவணப்படுத்துதல் என்று மாலைப் பொழுதில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு இக்காலை நிகழ்ச்சிகள் பக்க பலமாய் இருந்தன.

இறுதியாக ஒரு கல்ந்துரையாடல் - நோக்கம் நன்று - ஆனால் இடம் பெற்ற காலம் அதன் பயனை அவ்வளவாய்த் தரவில்லை. நடத்தியவர் சிறப்பாக்த் துவங்கினார். நேரமின்மை அதன் விளைவினை விளைவிக்க வில்லை.

பதிவுகளையே பார்த்த நமக்கு அதன் படைப்பாளிகளை நேரிலே பார்த்த போது மகிழ்வாய் இருந்தது. உண்மையில் படைப்பாளி ஆற்றல் மிக்கவன் தான் என்பது மனது பெறும் ஆறுதல் ! அதை அமைதியாய் நேரில் கண்ட போது கருத்தும் மகிழ்ந்தது - கண்களோடு !

விழாப் பொறுப்பாளர்களுக்கு - நல்வாழ்த்துகளுடன் கூடிய நன்றி உரித்தாகுக.

நட்புடன் சீனா

Friday 7 January 2011

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

புத்தாண்டு வாழ்த்துகள்
------------------------------

ஓட்டமும் நடையுமாய்
பயணிக்கும் வாழ்வில்...........

வயதுகள் கடந்தாலும்
விரல்கள் முடி கோத
தாயின் மடியில் தவழும்
ஒரு சுகம்...................

பதவிகளைக் கடந்து
ஆசிரியரைப் பார்த்ததும்
எழுந்து பணிந்து வணங்கும்
ஒரு கணம்................

பிரசவிக்கும் தாய்க்கு
பிரசவம் பார்க்கும் தாய்
பற்றக் கொடுக்கும்
ஒரு விரல் ................

நித்தமும் வெயிலில் காய்ந்து
ஒட்டிய வ்யிறோடு உலாவரும்
கட்டடத் தொழிலாளியின்
ஒரு கை...................

உள் வயிறு பசித்திருக்க
ஊர் வயிறு நிறைக்க
போராடும் விவசாயியின்
ஒரு பார்வை .............

இறப்பின் பொழுது
ஆதரவு இல்லாதவரை
அடக்கம் செய்ய முன்வரும்
ஒரு தோள்...............

சார்ந்த நிறுவனம்
சாதனை புரிவதில்
தான் உயர்ந்ததாய் நெகிழும்
ஒரு உணர்வு.............

என
நாதம் மீட்டும் நரம்புகளை
காலம் முழுவதும் சேர்ந்திசைப்போம்
மனிதம் என்பது வெளியில் இல்லை !
மனமே அதுவெனக் கொண்டாடுவோம் !!


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
---------------------------------------------

புத்தாண்டு தினத்தன்று அஞ்சலில் வந்த ஒரு வாழ்த்து இது.