ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Wednesday 22 August 2007

அசை போட்டு அனுபவித்து எழுதியது - குறிப்பு 1

ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பதாம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 16ம்நாள் (அலுவலக குறிப்புகளின் படி) புகழ் வாய்ந்த தஞ்சை மாவட்டத்தின் தலைநகராம் தஞ்சைத் தரணியின் முக்கிய வீதியான மேல வீதியில் உள்ளதிருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த நாங்குனேரியில் உள்ள வானமாமலை மடத்துக்குச் சொந்தமான ஒரு சிறு வீட்டில் அடியேன் இம்மண்ணில்அவதரித்தேன்.

அங்கு அறுபத்து மூன்றாம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் வரை ஒடி விளையாடி படித்து பின்னர் மதுரைக்குச் சென்றேன். அங்கு தஞ்சையில் எங்கள்வீட்டிற்க்கு இரண்டாம் இடத்தில் புகழ் வாய்ந்த காஞ்சி சங்கரமடம் இருந்தது. அம்மடத்தில் காலை மாலை வேத பாராயண வகுப்புகள் நடக்கும் - சிறு வயதில் - 10 வயது வரை என நினைக்கிறேன் - அவ்வகுப்பில் அனைத்துநண்பர்களும் படித்த காரணத்தால் - வகுப்பிற்கு வெளியே விளையாண்டு கொண்டிருப்பேன். காதில் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர என மந்திரங்கள் தொடங்கி அனைத்து பாராயணங்களும் காதில் விழும்.நண்பர்கள் உரத்த குரலில் முழு ஈடுபாட்டுடன் கூறும் வேதச் சொற்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.


காஞ்சி மடாதிபதி பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சுவாமிகள் பட்டணப் பிரவேசம் அடிக்கடி செய்வார்கள். பசு, ஒட்டகம், குதிரை, யானை என மிகஅதிக எண்ணிக்கையில் பின் தொடரும் பிராணிகளும் - முன்னே பாராயணங்களுடனும் இசையுடனும் வேத விற்பன்னர்களும் மற்றவர்களும் அணிவகுக்க நடுவினிலே பல்லக்கிலே சுவாமிகள் வருவது காணக் கண் கோடி வேண்டும்.


தற்போதைய மடாதிபதி பட்டத்திற்கு வந்த உடன் இங்கு பெரியவருடன்பட்டணப் பிரவேசம் செய்த காட்சியும் நினைவுக்கு வருகிறது. ஸ்ரீ ராம ஜயம்எனும் அரிய மந்திரத்தை 1008 தடவைகள் எழுதி சமர்ப்பித்து பெரியவரிடம் ஆசி பெற்றதும் உண்டு. ஒரு ஆரஞ்சு அல்லது சாத்துக்குடி மற்றும் ஒரு துளசி மாலை பரிசாக பெற்றதுமுண்டு. பெரியவரின் படம் எங்கள் பூஜை அறையில் நிரந்தரமாக இருக்கும்.


பெரியவர் செய்யும் சந்திர மொளீஸ்வரர் பூஜை மிகப் பெரிய அளவில் 15 தினங்களுக்கு அதி விமரிசையாக நடக்கும் - அனைத்து நாட்களிலும் முடிந்தவரை கலந்து கொண்டது உண்டு. அப்போது அங்கு காவலுக்கு வரும் காவல் துறையைச் சார்ந்த காவலர்களிடம் நட்பு கொண்டு அவர்களுக்கு வேண்டிய சிறு சிறு உதவிகள் செய்து மடத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லும் உரிமை பெற்றதும் உண்டு. 15/30 தினத் திருவிழா கொண்டாடும் மட்டற்ற மகிழ்ச்சி இன்று யாருக்கும் கிடைக்காது.

ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு முறை இம்மகிழ்ச்சி கிட்டும். மற்ற நாட்களில் மடத்திற்கு ஒருவரும் வர மாட்டார்கள். மடத்துக் செயலாளர் எங்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் தான் குடி இருந்தார். மடத்துக்கும் எங்கள் வீட்டிற்கும் நடுவில் அவரது வீடு.

மடத்தின் முன் கதவுகள் மற்ற நாட்களில் அடைத்திருக்கும். அவரது வீட்டின் உட்புறமாகச் சென்று தோட்டத்தின் வழியாக சென்று மடத்தின் பெரிய -உண்மையிலேயே மிகப் பெரிய - இடங்கள் முழுவதும் நானும் என்நண்பர்களும் ஓடி விளையாடி மகிழ்ந்த காலங்கள் இன்னும் பசுமையாகநினைவிலே நிற்கின்றன.

பல ஆண்டுகளுக்கு அம்மந்திரங்கள் மனதில் இருந்து அகலவில்லை - காலப்போக்கிலே பல்வேறு காரணங்களினால் - பல்வேறு சூழ் நிலைகளினால் தற்போது சுத்தமாக நினைவில் இல்லை - பெரியவர்களிடம் அபிவாதெயே கூறி ஆசி பெற்றதெல்லாம் நினைவில் இன்னும் நிற்கின்றன.
தஞ்சையில் மேல வீதியில் வீட்டிற்கு எதிரே கணேஷ் பவன் - அய்யர் கடை - சிற்றுண்டிச் சாலை - நல்ல நட்பு - அக்காலத்தில் அய்யர் என்பது மிக மரியாதையான சொல் -கல்லாவில் அமர்வது முதல் சமையல் கட்டு வரைசெல்லும் உரிமை பெற்றவன் நான்.

மேல வீதியின் ஒரு கோடியில் சங்கரநாராயணர் கோவில் - அரணும் அரியும் ஒன்றாகக் காட்சி அளிக்கும்கோவில் - மற்ற கோடியில் காமாட்சி அம்மன் கோவில். ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் - கோவிலுக்குச் செல்லாத நாளே கிடையாது. தற்போது கோவிலுக்குச் செல்லும் நாளே கிடையாது - ஆண்டின் சில முக்கியதினங்கள் தவிர.

தஞ்சையில் ஆண்டு முழுவதும் திருவிழா தான். கொண்டாட்டம் தான்.முக்கியத் திருவிழாக்கள் -தேர்த்திருவிழா - பல்லக்கு - திருவையாரின் முத்துப்பல்லக்கு பிரசித்தம் - தஞ்சைத் தெருக்களிலே சிறுவர்களின் சப்பரங்கள் புடை சூழ அசைந்து அசைந்து அது வரும் அழகே அழகு - மற்றும் பச்சைக் காளி பவளக்காளி திருவிழா - பசுமையான நினைவுகள் - அசை போட ஆனந்தம்.

நவராத்திரி ஒன்பது தினமும் பல்வேறு வீடுகளுக்கு நண்பர் படை சூழ சென்று பல்வேறு வகையான கொலுவினைக் கண்டு களித்து அவர்கள் தரும் தின்பண்டங்களுக்காவே சென்று - அக்காலம் பொற்காலம் - எவ்வளவு பொம்மைகள் - எவ்வளவு விதமான கொலுக்கள் - தெற்கு வீதியில் உள்ள ஒரு பெரிய வீட்டில் தத்ரூபமாக பெரிய அளவில் சரித்திர நிகழ்வுகள்உயிரோட்டத்துடன் சித்தரிக்கப் பட்டிருக்கும். இலண்டன் மாநகர மெழுகு -(Madame Tussot) - கண்காட்சிப் பொம்மைகள் எல்லாம் பிச்சை வாங்க வேண்டும் - அப்போதிருந்த வசதிக்கேற்ப நிஜ மனிதர்களைப் போலவே தேசிங்கு ராஜன் - செஞ்சிக்கோட்டை - மாவீரன் சிவாஜி - ப்ரித்வி ராஜன் சம்யுக்தையைக் கவர்ந்து செல்லும் காட்சி - தத்ரூபமாகச் சித்தரிக்கப் பட்டிருக்கும். அக்குதிரையின் முகத்தில் கண்களில் உள்ள கோபம் வீரம் - ராஜனின் பலவேறு உணர்ச்சிகள் - சம்யுக்தையின் பயங்கலந்த மகிழ்ச்சி-காணக் கண் கோடி வேண்டும் - அம்மகிழ்ச்சி தற்போதைய சிறுவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.


தொடரும்

சீனா - 22082007