ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Monday, 25 January 2010

ஒரு விழிப்புணர்வு நிகழ்வு - மதுரைப் பதிவர்கள்


அன்பின் சக பதிவர்களே !

மதுரையில் உள்ள தமிழ்ப் பதிவர்கள் ஒன்று கூடி ஒரு விழிப்புணர்வு - பொது நல நிகழ்வு ஒன்றை நிகழ்த்த விரும்பினர். அதனைச் செயலாக்க ஒரு கருததரங்கத்தைக் கூட்டி உள்ளனர்.

வளரும் தலை முறையினரை நல்வழிப் படுத்த, பெற்றோர்க்கும் ஆசிரியர்க்கும் பயனுள்ள கூட்டத்தை நடத்த இருக்கின்றனர்.

இதில் மனநல மருத்துவர் ஷாலினி அவர்கள் கலந்து கொண்டு கருத்துகளை பரிமாற உள்ளார். குழந்தைகளுக்கு நல்ல தொடுகை - அல்லாத தொடுகை - எவை என்பதை உணர்த்தும் படியாக பாதுகாவலராகிய பெற்றோர்க்கும் ஆசிரியர்க்கும் இக்கருத்தரங்கம் பயனளிக்கும்.

எனவே விருப்பமுள்ளவர்களை கலந்து கொள்ள மதுரைப் பதிவர்கள் அழைக்கின்றோம். மற்றும் நிறுவனங்களிலிருந்தும் தங்களது ஆர்வலர்களை அனுப்பலாம். இவர்கள் அனைவரும் சமூக நலம் கருதி நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற 29.01.2010 க்கு முன்னதாக விருப்பத்தினைத் தெரிவித்தால் நலமாக இருக்கும்.

அனுமதி இலவசம் !

நாள் : 31.01.2010 ஞாயிறு
காலம் : மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை
இடம் : அமெரிக்கன் கல்லூரி ( செமினார் ஹால் )
கருத்தரங்க ஆய்வர் : மன நல மருத்துவர் ஷாலினி
M.B.B.S., Ph.D., F.R.P.S.
Consultant Psychiatrist
"MIND FOCUS"
Psychiatric Services and Research Foundation

தகவலுக்கும் முன்பதிவிற்கும் தொடர்பு கொள்ள :

தருமி : 9952116112
சீனா : 9840624293
கார்த்திகைப் பாண்டியன் : 9842171138
ஸ்ரீ : 9360688993

நல்வாழ்த்துகள்.
நட்புடன் சீனா.
மதுரை தமிழ்ப் பதிவர்கள் .

Sunday, 3 January 2010

அன்ன தான மகிமை

அன்பின் பதிவர்களே

கர்ணனைப் பற்றி பல கதைகள் கேட்டிருக்கலாம் - படித்திருக்கலாம்

இதோ ஒன்று

அன்னதான மகிமையை விளக்கும் கதை

கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட - தான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் தானம் கொடுத்தவன். தானத்திற்கே பெயர் பெற்றவன். தானம் என்றால் என்ன என்பதை உலகிற்குக் காட்டியவன். அவன் இறந்ததும் கண்ணனால் சுவர்க்கத்துக்கு அனுப்பப்பட்டவன்.

அங்கு சென்று சகல வசதிகளுடன் இருந்தும் அவனுக்கு ஏனோ பசி அடங்கவில்லை. எப்பொழுதும் வயிற்றுப்பசி இருந்து கொண்டே இருந்தது. அவனும் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போனான். பிறகு சுவர்க்கத்தின தலைவனிடம் சென்று கேட்டான். நான் எவ்வளவு தான தருமங்கள் செய்திருக்கிறேன் - எனக்கு ஏன் இக்கொடிய தண்டனை - எனக்கு ஏன் இப்படிப் பசிக்கிறது எனக் கேட்டான்.

தலைவனோ - கர்ணா நீ பூவுலகில் வாழ்ந்த காலத்தில் பொன்னும் பொருளும் மனியும் ஏன் உன்னுயிரும் தானமாகக் கொடுத்து பெரும் புகழ் பெற்றவன். ஆனால் சிந்தித்துச் சொல் - எப்போழுதாவது யாருக்காகவாது அன்ன தானம் செய்திருக்கிறாயா - எனக் கேட்டான்.

கர்ணனுக்கு அன்ன தான செய்ததாக நினைவு இல்லை. அன்ன தானம் செய்யாததால் தான் இப்பொழுது வயிற்றுப்பசி அடங்க வில்லை எனவும் கூறக் கேட்டான். அப்படியானால் இதற்கு என்ன தான் வழி எனக் கேட்ட போது - தலைவன் கூறினான் - உனது வலது கை ஆள் காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் - பசி அடங்கி விடும் என்றான்.

கர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. விரலைச் சப்பினால் பசி அடங்குமா - என்ன இது என ஐயப்பாடு இருந்தாலும் - வேறு வழி இல்லை என வலது கை ஆள் காட்டி விரலை வாயில் வைத்து சப்ப - பசி உடனே அடங்கிற்று.

ஒன்றும் புரியாத கர்ணன் - இது எப்படி மாய மந்திரம் எனக் கேட்க - தலைவன் கூறினான் - அன்பின் கர்ணா - நீ பூவுலகில் வாழும் போது உன்னிடம் ஒரு வறியவன் பசியுடன் வந்து எங்கு அன்னதானச் சத்திரம் இருக்கிறதென்று கேட்க - நீயும் உனது வலது கை ஆள்காட்டி விரலால் இதோ இப்பக்கம் செல்க என வழி காட்டினாய். அந்த புண்ணியச் செயல் - நற்செயல் உனக்கு இப்பொழுது உதவுகிறது எனக் கூற -கர்ணனும் அன்ன தான மகிமையை உணர்ந்தான்.

பதிவர்களே - நாமும் பிறந்த நாள் - திருமண நாள் - என்று கொண்டாடும் போதெல்லாம் - முதியோர் இல்லங்களில் வாழ்பவர்கள் - அனாதை இல்லங்களில் வாழ்பவர்கள் - வறியோர் இவர்களுக்கெல்லாம் அன்ன தானம் செய்தால் அவர்கள் பெறும் மகிழ்ச்சியானது நமக்கும் மகிழ்ச்சியினையும் புண்ணியத்தைனையும் தரும் .

வாருங்கள் அன்ன தானம் செய்வோம் - இனிய புத்தாண்டில் இச்செயலைச் செய்வோம்

அனைவருக்கும் இனிய இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்

அன்புடன் - நட்புடன் சீனா


Thursday, 22 October 2009

தீபாவளி சிறப்புப் பதிவு 2009

தீபாவளி சிறப்புப் பதிவு 2009

அருமை நண்பர் சதங்கா இவ்வருடம் தீபாவளியினை முன்னிட்டு ஒரு சிறப்பு இடுகை இட்டு அதனைத் தொடர் இடுகையாகத் தொடர பலரை அழைத்திருக்கிறார். அத்தொடரில் என்னையும் அருமைச் சகோதரி நானானி அவர்கள் அழைத்திருக்கிறார். எழுத் வேண்டுமாம். இப்படி யாராவது அழைத்தால் தான் எழுதுவது என்பது வழக்கமாகி விட்டது. என்ன செய்வது ....


தொடரில் பல கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன

அவற்றிற்கு மனந்திறந்து பதிலளிக்க வேண்டுமாம் - பார்ப்போம் எப்படி மனம் திறக்கிறதென்று.

அதற்கு முன்னால் விதிமுறைகள் :

  1. கேள்விக‌ளுக்கு உங்க‌ள் வ‌லைத்த‌ள‌த்தில் புதிய பதிவில் ப‌திலளியுங்கள்.

  2. 'தீபாவளி சிறப்புப் பதிவு - 2009' என்று தலைப்பிட்டால் நலம்.

  3. இத்தொடர் தொடருவதைத் தெரிவிக்க, இங்கிருக்கும் தீபப் படத்தை உங்கள் வலைத்தளத்தில் ஒட்டி, உங்கள் பதிவிற்கான சுட்டியும் தரவும்.

  4. அனைத்து கேள்விகளுக்கும் (மனம் திறந்து) பதில் அளியுங்கள்.

  5. உங்கள் நண்பர்கள் நால்வரைத் தேர்ந்தெடுத்து தொடரைத் தொடர அழையுங்கள்.

சரி சரி கேள்வி பதிலுக்கு வருவோம்

பொதுவாக நானானி அளித்த பதில்கள் பெரும்பாலும் அப்படியே எனக்கும் பொருந்தும். இப்படிச் சொல்லிட்டு முடிச்சிடலாமா ? பரவால்ல - கொஞ்சம் எழுதுவோம்.

1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?
    என்னைப் பற்றிய ஒரு சிறு குறிப்பா .... ஆகா ஆகா - தம்பட்டம் அடிக்குமளவிற்கு குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு ஒன்றுமில்லை. பொறியியல் பயின்றவன் - வங்கியிலே பணி புரிபவன் -தஞ்சையிலே பிறந்து மதுரையிலே வளர்ந்து சென்னையிலே வாழ்ந்து மறுபடியும் மதுரையிலே வசிப்பவன். தமிழ் கற்றவன். அறிஞன் இல்லை - கவிஞன் இல்லை - புலவன் இல்லை. தமிழ் கற்றவன் அவ்வளவுதான்.

2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?

அப்படி ஒன்றும் நடந்ததாக நினைவில் இல்லை. சிறுவயதுத் தீபாவளி - ஒரு இடுகை இட்டிருக்கிறேன். சென்ற ஆண்டு தீபாவளீயின் போது . மலரும் தீபத் திருநாள் நினைவுகளாக. நேரமிருப்பின் சென்று பார்த்து மகிழுங்களேன்.

3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

இனிய 2009 தீபாவளிக்கு எங்கும் செல்ல வில்லை. மதுரை
மாநகரத்திலேயே தான் இருந்தோம்.
Justify Full
4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

ஒன்றும் சுவாரஸ்யமாக இல்லை. வழக்கம் போல் எழுந்து, குளித்து, புத்தாடை அணிந்து, கங்காஸ்நானம் ஆச்சா - கேள்வி கேட்டு - கேட்டவர்களுக்குப் பதில் கூறி - கோவிலுக்குச் சென்று - வந்து நல்லா சாப்பிட்டு - தொலைக்காட்சி பார்த்து - இணையத்தில் பொழுது போக்கி ..........

5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

தைப்பதெல்லாம் என் பெற்றோர் காலத்தில் - படித்த காலத்தில் - பணியில் சேரும் முன்னர் - இருந்த பழக்கம். இப்பொழுதெல்லாம் ஆயத்த ஆடையகம் தான். தீபாவளிக்கென்று புத்தாடை வாங்குவது குறைந்து விட்டது. மனதிற்குத் தோன்றிய பொழுதெல்லாம் வாங்குவது வழக்கமாகி விட்டது. எப்பொழுதும் வீட்டில் சில புத்தாடைகள் இருக்கும். உள்ளாடைகளும் பிள்ளையார் துண்டும் சனீஸ்வரர் துண்டும் புதியதாக வாங்குவோம். குறிப்பிட்ட கடை என்று ஒரு கொள்கையும் கிடையாது.

6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

செய்வது வாங்குவதெல்லாம் என் வேலையல்ல. அதற்கென்றே வீட்டில் ஒரு துணைவி வைத்திருக்கிறேனே. அவர்கள் செய்வதைச் சாப்பிடுவேன். அவ்வளவுதான். என்ன சாப்பிட்டேன் - தெரில - கேக்கணும். பொதுவா ரெண்டே பேர் தான் இருக்கறதாலே அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. வீட்டிற்கு நெறெய பலகாரங்கள் வரும் - செல்லும்.

வந்த பலகாரங்கள் : தேன்குழல் - மாஉருண்டை - அதிரசம் - ரிப்பன் பகோடா - குலோப் ஜாமூன் - சீப்புச் சீடை - உலர்ந்த பழங்கள் - அல்வா - லட்டு - சோன் பப்டி - இன்னும் பலப்பல இனிப்புகள். இவை அனைத்தும் கண்ணால் பார்த்து விட்டு சாஸ்திரத்துக்கு ஒன்று இரண்டு சாப்பிட்டு விட்டு மீதம் பலருக்கும் சென்று விடும்.

7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

அலைபேசி தொலைபேசி மின்மடல் இணைய வாழ்த்து அட்டைகள் என நவீன முறைகள்

8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

இரண்டும் இல்லை. கணினியில் மூழ்கி விட்டேன்.

9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட நபர்களுக்கோ / நிறுவனங்களுக்கோ உதவி செய்ய்யும் வழக்கம் இல்லை. ஆண்டு முழுவதும் - தேவைப்படுபவர்கள் அணுகும் போது - நிறுவனங்களும் சரி தனி நபர்களும் சரி - இறைவனின் கருணை இருக்கும் வரை உதவி செய்கிறோம் - செய்வோம்.

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

இதுதான் கடினமான கேள்வி - யாரை அழைப்பது - யாரை விடுவது - கடினமான செயல். இருப்பினும் மதுரைக்காரர்களை அழைத்து விடுகிறேன்.

01 : கார்த்திகைப் பாண்டியன் - http://ponniyinselvan-mkp.blogspot.com
02 : ஸ்ரீ - http://sridharrangaraj.blogspot.com
03 : பாலகுமார் - http://www.solaiazhagupuram.blogspot.com
04 : தேனி சுந்தர் -http://thenitamil.blogspot.com

அப்பாடா - ஒரு வழியா எழுதி முடிச்சாச்சு - மக்களே படிங்கப்பா

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா