ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Wednesday, 12 December 2012

டெங்கு ஒழிப்பு - விழிப்புணர்வுக் கூட்டம் - தெருமுனைக் கூட்டம்

அன்பின் நண்பர்களே !

மதுரை மாநகரில் சந்தைப் பேட்டையில் உள்ள டாக்டர் T.திருஞானம் துவக்கப் பள்ளியைச் சார்ந்த மழலைச் செல்வங்கள் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு சரவணன் அவர்களின் தலைமையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம்  தெரு முனைக் கூட்டமாக தினந்தோறும் மாலையில் நடத்துகின்றனர். அக்கூட்டத்தில் கலந்து கொண்டு மகிழ்ந்தோம். அக்கூட்டங்களைப் பற்றிய ஒரு பார்வை.



இன்னும் நம் நாட்டில் தெருமுனைக் கூட்டங்கள் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய செய்திகள் எத்தனை எத்தனையோ இருக்கின்றன. அதில் இப்பொழுது நம்மை எல்லாம் பாடாய்ப் படுத்திக் கொண்டிருப்பது டெங்குக் கொசு. அதை நம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லை. என்ன செய்தாலும் அது நம்மைப் பாதித்துக் கொண்டே தான் இருக்கிறது. எப்படி இந்தப் பாதிப்பை பாலம் போட்டுத் தாண்டலாம் என பள்ளிப் பருவத்து பச்சிளம் குழந்தைகள் பால் மனம் மாறா மொழிகளில் வடித்தெடுப்பது நம் நெஞ்சத்தை எல்லாம் தொட்டுச் செல்கிறது.




ஒருஏழைக்குத் தான் தெரியும் அந்த வறுமையின் வலி. அதைப் போல் வளர்கின்ற பிஞ்சுகள் வானத்தை வில்லாய் வளைக்க வட்டமிட்டு, கை கொட்டி, கால் தட்டி, கண்கள் சுழற்றி, தம் சின்னஞ்சிறு பாதங்கள் மண்ணிலும் புழுதியிலும் பதித்து, புதிய பாடமெழுதப் பாடுகின்ற பாடல்கள் நம் பாட்டை எல்லாம் போக்கி விடும் !.

மெலிந்த உருவமும் துள்ளுகின்ற கண்களும் துடிக்கின்ற பார்வையுமாய் பாட்டெழுதிப் பாடமாய்ப் படிக்கின்ற போது சந்தத் தமிழும் துள்ளி விளையாடுகின்றது.

குப்பையைக் கொட்டாதே ! நீரினைத் தேக்காதே ! மக்கும் குப்பையைத் தனியே போட்டு வை ! மக்காக் குப்பையை ஒதுக்கி வை ! சுற்றுப் புறத்தைத் தூயமையாய் வை ! மறந்தும் மண் வளத்தைக் கெடுக்கும் குப்பைகளைக் கொட்டித் திரியாதே ! நீர் தேக்கும் தொட்டிகளை மூடி வை ! கழுவி வை ! காலத்தே அவற்றைத் தூய்மை செய் !

இவ்வாறு சின்ன்ஞ் சிறு செல்வங்கள் தெருவெல்லாம் பாடி முழக்கமிடும் அவர்களின் முனைவை என்னென்று சொல்வது ?!. எண்ணத்தால் எப்படி வடிப்பது ?!. எங்கெல்லாம் பரப்புவது ?!. ஓடி விளையாடும் பாப்பாக்கள் ஓடி ஓடி உண்மையை உரைக்கின்றனர்.! உங்களைக் காக்க, டெங்குவை ஒழிக்க கொசுக்களை ஒழிப்போம் ! சுற்றுச் சூழல் காப்போம் ! என்று சூளுரைக்கின்றனர்.

ஏழெட்டு வயதுச் சிறுவர் சிறுமியர் ஏற்றமுடன் ஆடிப் பாடி அனைவரையும் தன் வயப்படுத்துகின்றனர்.! தெருக்களில் செல்வோர் சிறிது நேரத்தில் கூடி விடுகின்றனர்.! குழந்தைகளீன் குரல் ஒசையில் ஏதோ உள்ளதென்று ஏக்கத்துடன் நின்று உன்னிப்பாய்க் கவனித்துச் செல்கின்றனர். நினைத்ததை நடத்தியே முடிக்கும் இளம் சிட்டுக்கள் டெங்கு இல்லா சுற்றுப்புறத்தை படைத்துக் காட்டுகின்றனர்.! நாமும் நயமாய்ப் பயமாய் சொல்லிப் பார்த்தால் நாடே நோயின்றி வளம் பெறுமென்று எண்ணுகின்றனர். இயங்கட்டும் இவர்களின் எண்ணங்கள். எல்லாரும் டெங்கின்றி வாழட்டும் வளமுடன் !

செல்வி ஷங்கர் ( திருமதி சீனா ) 

Thursday, 9 August 2012

சென்னையில் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா

அன்பின் நண்பர்களே

சென்னை வாழ் பதிவர்கள் ஒன்று கூடி - சிந்தித்து - பல ஆலோசனக் கூட்டங்கள் நடத்தி - வருகிற 26ம் நாள் - ஞாயிறன்று - சென்னையில் திரு விழா கொண்டாடுவதெனத் தீர்மானித்து - அதற்கான ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்து வருகின்றனர்.

அருமை நண்பர் மது மதி அழைப்பிதழகளை அனைவருக்கும் அனுப்பி வருகிறார்.


அழைப்பு கிடைத்த நண்பர்களும் மற்ற நண்பர்களும் திரு விழாவில் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்புடைய பதிவுகள் :


சென்னையில் சந்திப்போம் நண்பர்களே

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா



Sunday, 2 October 2011

காந்தி ஜெயந்தி - மதுரை மாவட்ட ஆட்சியர் திரு சகாயம் சிறப்பு பேச்சாளர்


இன்று அக்டோபர் இரண்டாம் நாள். மகாத்மா காந்தி பிறந்த நாள். முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாள். கர்ம வீரர் காமராஜ் நினைவு நாள்.
மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில், மகாத்மாவின் 142வது ஜெயந்தி விமரிசையாகக் கொண்டாடப் பட்டது. இவ்விழாவில் சிறப்புப் பேச்சாளராக மதுரை மாவட்ட ஆட்சியர் திரு சகாயம் அவர்கள் கலந்து கொண்டு பேசிய பேச்சின் சாராம்சம்.

தெளிவான சிந்தனையுடன், அழகான தமிழ்ச் சொற்களுடன், அருமையான நிகழ்வுகளின் வர்ணனைகளுடன், மருந்துக்குக் கூட ஒரு ஆங்கிலச் சொல் கலக்காமலும், சிறந்த ஒலியுடனும், உச்சரிப்புடனும், கம்பீரமான தோற்றத்துடனும், பிரமிக்கத்தக்க நினைவாற்றலுடனும் திரு சகாயம் அவர்கள் ஆற்றிய உரை பார்வையாளர்களைப் அமைதியுடனும், அசையாமலும் இருக்கச் செய்தது.

உள்ளாட்சித் தேர்தல் பணிகள் துவங்கி, நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் அவரது பேச்சுபொதுவாக காந்திய சிந்தனைகளை முன்னிலைப்படுத்தியும், மதுரை மாவட்டத்தையும் - அங்கு அவரது செயல்களையும் பற்றியே இருந்தது.

ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த காலத்திலேயே கிராமப்புறங்களில் நிலம் தொடர்பான ஆவணங்களும், நில வரிகள் வசூலிப்பும் மாவட்ட ஆட்சியரின் அதிகாரத்தில் தான் இருந்தது. அது அப்படியே இன்றும் தொடர்கிறது. அலுவலர்கள் கிராமந்தோறும் சென்று பிரச்னைகளை அங்கேயே தீர்த்து வருவதும் நடக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப் பட்டதனால் - தேர்தல் தொடர்பான அலுவலர்கள் கிராமங்களிலேயே இருக்க வேண்டும் எனவும் ஏற்படும் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்கவும், தேவை எனில் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு வரவும் அறிவறுத்தப் பட்டிருக்கின்றனர்.

வாக்காளர்களுக்கு பணம், இலவச அன்பளிப்புகள், விருந்து வேட்பாளர்களின் சார்பில் வழங்கப்பட்டால், தேர்தல் ஆணையத்தின் வழி காட்டுதலின் படியும், தமிழகத் தேர்தல் ஆணையரின் அறிவுரைகளின் படியும் - தேர்தல் விதிமுறைகளின் படியும் அவை குற்றமாகக் கருதப்பட்டு- உடனடியாக குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அலுவலர்கள் அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள்.

ஒரு நேர்மையான தேர்தல் நடைபெறும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை,


"இலஞ்சம் தவிர்த்து - நெஞ்சம் நிமிர்த்து " என்ற செய்திப் பலகையினை தன் அறையில் தன் இருக்கைக்கு மேலே மாட்டி வைத்திருக்கும் இவரைப் பாராட்டச் சொற்களே இல்லை. எந்நிலையிலும் மனச் சாட்சிப்படிப் பணியாற்ற வேண்டும் என்ற வேகம் அவரது புயல் வேகப் பேச்சிலிருந்தது. அவரது எளிய தோற்றம் மற்றும் மிடுக்கான ஆற்றல் திறன் அவரை ஒரு வரலாறு படைக்கும் மனிதராக ஆக்குகிறது.


திரு சகாயம் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த போது நடந்த இரு சம்பவங்களையும் அவரது உரையில் எடுத்துரைத்தார்.

ஒரு தடவை அவர் நெடுஞ்சாலையில் அவரது வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, இரு இளைஞர்கள் அவரது வாகனத்தின் முன்பு - சாலையில் தாறுமாறாக வாகனத்தை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தனர். அதைப் பார்த்த இவர் அவர்களை நிறுத்தி - அதிகாரிகளைக் கொண்டு, வாகனம் ஓட்டும் உரிமம் அவர்களிடம் இருக்கிறதா என்றும், அவர்கள் மது அருந்தி இருக்கிறார்களா எனவும் சோதனை இடச் சொல்லி இருக்கிறார். அவர்களிடத்தில் தகுந்த உரிமம் இல்லை எனவும், அவர்கள் மது அருந்தி இருக்கிறார்கள் எனவும் அதிகாரிகள் கூற, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார்.

உடனே அவ்விரு இளைஞ்ர்களில் ஒருவன் இவரை அணுகி ஒரு நூறு ரூபாய் நோட்டினை இவரிடம் நீட்டி - சார் இனிமே பண்ண மாட்டோம் சார் இப்போ
அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க சார்னு கூறினானாம். இலஞ்சத்திற்கு எதிராகப் போராடும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கு ஒரு இளைஞன் 100 ரூபாய் இலஞ்சம் இயல்பாகக் கொடுக்க முயல்கிறான் என்றால் - நம் நாடு இலஞ்சத்தில் எவ்வளவு தூரம் புரையோடிப் போய் இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

மற்றுமொறு சம்பவத்தினையும் அழகாக எடுத்துரைத்தார்.

இவர் வழக்கமாக கிராமங்களில் குறை தீர்க்கும் நாளன்று அங்கேயே தங்கி - குறைகளைக் கேட்டறிந்து, அலசி ஆய்ந்து, தீர்வுகளும் கூறி, குறைகளை அங்கேயே தீர்க்கும் வழக்கமுடையவர். அது போல் ஒரு நாள் இரவு முழுவதும் பொது மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, தகக நடவடிகைகள் எடுத்து விட்டு, அதிகாலையில் கிராமத்தினை விட்டுப் புறப்பட்டுச் செல்லும் வழியில் ஒரு இடத்தில் ஒரு கணவன் மனைவி இருவரும் பருத்தி பறித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து - என்ன இது - ஒரு மாவட்ட ஆட்சியர் கிராமத்து மக்களின் குறைகள் தீர்க்க கிராமத்திற்கே நேரில் வந்து - தங்கி - குறைகளைத் தீர்த்து, அங்கிருந்து செல்லும் வரை இவர்கள் எதனைப் பற்றியும் கவலைப்படாமல் அவர்களது உழைப்பிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களே என வியந்து அவர்களை அழைத்து, என்ன குறை ஒன்றும் இல்லையா எனக் கேட்க, அவர்களும் ஒன்றும் இல்லை என்றும் - எங்கள் வேலைகளைச் செய்கிறோம் எனக் கூற, இவரும் கருமமே கண்ணாய் இருந்த அவர்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பினார்.

கணவனோ ஆடை ஒன்றும் அணியாமல் ஒரு கோவணத்துடன் இருந்ததால் - புகைப்படம் எடுக்கத் தயங்க - இவர் வலியுறுத்தி புகைப் படம் எடுத்து - அப்படத்தினை அவரது மாவட்ட ஆட்சியர அலுவலகத்தில் = அவரது அறையின் முன்பு மாட்டி இருந்தாராம். இவர் இதுவரை எடுத்துக் கொண்ட புகைப்படங்களிலேயே - இப்படம் தான் இவரைக் கவர்ந்ததாகவும் - இவரது மனதிற்குப் பிடித்ததாகவும் இருந்ததாம்.

ஆக இவரது பேச்சும் இவரது செய்திகளும் மக்களை நன்கு சென்றடைந்தன.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா