ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Friday, 8 March 2013

ஜோதிஜியின் டாலர் நகரம் - ஒரு பார்வை

ஜோதிஜியின் டாலர் நகரம் : 

ஒரு தனிமனிதனின் வாழ்க்கைப் போராட்டமும் முன்னேற்றமும் எப்படி இருக்குமென்பதை இந்நூல் வெளிப்படுத்தி உள்ளது. அதில் ஆங்காங்கே சமுதாயப் பார்வையும் சற்றே தலை தூக்குகிறது. பொதுவாக திருப்பூரில் வாழ்பவர்களுக்கு இந்நூலில் கூறப்பட்டிருப்பவை இயல்பானதாக இருக்கலாம். ஆனால் திருப்பூரைப் பற்றி புதிதாக அறிபவர்களுக்கு வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கலாம்.

ஒரு வளர்ந்து வருகின்ற ஊர் - ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை செய்கின்ற ஒரு ஊர் - உழைப்பையும் உழைப்பின் பயனையும் அடுத்த மாநிலத்திற்கும் அயல் நாட்டிற்கும் தருகின்ற ஒரு ஊர் - வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்வதற்குத் தயங்காத மக்களைப் பெற்றிருக்கின்ற ஒரு ஊர் - முன்னேற்றமடைவதற்கு முட்டுக் கட்டையாக இருக்கின்ற சூழ்நிலைகள் உழைப்பாளிகளை வெறுப்படையச் செய்கின்றன எனபதை ஆதங்கத்தோடு எடுத்துரைத் திருக்கின்றார் ஆசிரியர்.  

அயல் நாட்டின் வளர்ச்சிக்கும் பொருள் வரும் வழிக்கும் வழி வகுத்துக் கொடுக்கத் தயாராக இருக்கின்ற நாட்டாமைகள்,  உழைக்கின்ற ஊருக்கு உதவி வரத் தடுக்கின்ற வழி முறைகளை உள்ளத்தின் நெருடலோடு ஆங்காங்கே உணர்த்துகிறது இந்நூல்.

இயற்கை வளத்தை அழிக்கின்றது சாயக் கழிவுகள் என்றால் அதை நீக்கித் தொழில்வளம் பெறுவதற்கும்,  தனி ஒரு மனிதனுக்கும், அதனையே தொழிலாய்க் கொண்ட ஊருக்கும் வழி வகைகளைச் செய்வதற்கு ஆளுகின்ற அரசு உதவ வேண்டுமே என்ற ஆதங்கம் கருத்துக்களாய் வெடிக்கின்றது இந்நூலில். 

நூலின் துவக்கத்தில் வேலையின் அடிப்படை நிலையில் எல்லாம் தன் திறமையை மட்டுமே ஊன்றுகோலாய்க் கொண்டு உழைப்பில் போராடி 
முன்னேறிய வரலாற்றைச் சோர்வின்றி ஒரு எழுத்தாளனின் பார்வையில் கொண்டு சென்றிருப்பது ஆசிரியரின் எழுத்தாற்றலை வெளீப்ப்டுத்துகிறது. தொழில் - வளர்ச்சி - போராட்டம் - பொருள் - வாழ்க்கை  என்ற நிலைகளை எல்லாம் சொல்லும் போது ஆசிரியர் பாரம்பரியம் - கலாச்சாரம் - தாய் மொழிப் பற்று என்பதனை எல்லாம்  ஆங்காங்கே சொல்லி இருப்பதும் நமமை எல்லாம் சிந்திக்க வைக்கிறது. 

ஒரு ஊருக்கு உயிர் கொடுக்கின்ற தொழிலை, வளர்வதற்கு வழி வகை செய்ய வேண்டும். செய்தால் அது நாட்டின் நலத்திற்குத் துணை செய்யும் வளர்ச்சி தானே ! என்பதனை நூல் சொல்லாமல் சொல்கிறது. 

எண்ணங்களை எழுத்தாக்குவதென்பது எல்லாராலும் இயலாது.  ஆனால் அது ஜோதிஜிக்கு கை வந்த கலையாக வாய்த்திருப்பது நிச்சயம் பாராட்டப் பட வேண்டிய ஒன்று. பாராட்டும் தகுந்த நேரத்தில் இருப்பது அதற்கு இன்னும் மேன்மை சேர்க்கும். 

நல்வாழ்த்துகள் ஜோதிஜி 
நல்ல சிந்தனைகளை இன்னும் தாருங்கள்.

ஆக்கம் செல்வி ஷங்கர். 

அன்புடன் சீனா 




Monday, 11 February 2013

மதுரை வாசகர் வட்டம் - 8ம் ஆண்டு நிறைவு விழா

அன்பின் மதுரை வாசகர் வட்ட உறுப்பினர்களே !

நேற்று மாலை ( 10.02.2013 ) நடந்த மதுரை வாசகர் வட்டத்தின் 8ம் ஆண்டு நிறைவு விழாவில் சென்னை ராமகிருஷ்ணா மடத்தினைச் சார்ந்த சுவாமி விமூர்த்தானந்தர் சிறப்பு விருந்தினராய் ஆற்றிய சிறப்புரையின்   ஒரு பார்வை. 

தலைப்பு : STOP CHASING MONEY;START ACQUIRING WEALTH


                     பணத்தைத் துரத்தாதே ! செலவத்தைச்  சேர் - இது நம் மனத்திற்கு இடும் கட்டளை. பணமும் செல்வமும் வாழ்க்கையில் நம்மைப் பந்தாடுகின்றன. எது பணம் எது செல்வம் என்பதை அறிவதற்கே நமக்கு மனத் தெளிவு வேண்டும். செல்வம் என்பது சிந்தையின் நிறைவு. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கமுடையான் இடத்து என்ற செல்வத்தின் வரையறையை மிக இயல்பான சொற்களால் எளிமையான நடையில் கேட்பவர் மனம் கொள்ளுமாறு இனிமையாகப் பேசினார்.  சொல் நடையில் ஒரு அதிகாரமோ சொல்லாட்ட்சியில ஒரு ஆணவமோ இல்லாமல் அரிய கருத்துகளை எளிமையாய அவர் வெளிப்படுத்திய தன்மை இதுதான் துறவு என்பதை உணர்த்தியது.  அடக்கமும் அன்பும் ஆழமான அறிவும் நிறைந்த சொற்களால் அவர் நிறையக் கருத்துகளை எடுத்துரைத்தார். 

அவர் உரையின்  நோக்கம்  கேட்பவர்களைச் சென்றடைய வேண்டும் என்ற கருத்தினையேச் சுற்றிச் சுற்றி வந்தது. வாழ்க்கைக்குப் பொருள் வேண்டும் - அதனால் பொருளைத் தேடு - பொருளே வாழ்க்கை அல்ல - போதுமென்ற மனமே பொன் செய்ய்யும் மருந்து - தேவைகளை நிறைவு செய்யப் பொருளீட்டினால் அது மன நிறைவைத் தரும். அளவுக்கு மீறி ஆசைப்பட்டு பேராசையாய்ப் பொருளீட்டினால் அது பெரும் துன்பத்தைத் தந்து விடும்..  அளவான செல்வம் நிறைவான மனத்தைத் தருகிறது. அதற்கு ஒரு அழகான நிகழ்ச்சியாய் எட்டு ரூபாய் சேர்க்கிற ஒருவன் அதில் தானமும் செய்து தருமமும் செய்து எதிர் காலத்திற்கும் திட்டமிட்டு நிகழ் காலத்திலும் நிறைவோடு வாழ்கின்ற வாழ்க்கையை அவர் தெளிவாக எடுத்துரைத்தார். 

படிப்பு, பண்பு, அறிவு, பணம், புகழ், பேர், புனிதம், புண்ணியம் என்ற எட்டையும் பெறுவதே வாழ்க்கை. அதற்குப் பணம் ஒரு கருவி. அவ்வளவே.   அது அளவுக்கு மீறினால் கொம்பேற்றிக் கொள்ளும் ( “ப” பி” ஆகும் ). நம்முடைய பெயரும் படிப்பால் பண்பால் அறிவால் உயர வேண்டும். பெயரும் புகழும் பணமும் நல்வழியில் நல்லவற்றைச் செய்ய உதவ வேண்டும். 

பாம்பாட்டிகள் நிறைந்திருந்த இந்தியா இப்பொழுது எலி பிடிப்பவர்கள் நிறைந்த நாடாகி விட்டது - ( IT People use MOUSE ) என்று காலத்திற்கேற்ற நகைச் சுவையோடு வளரும் இந்தியாவை, வளர்கின்ற இந்தியாவை வெளிப்படுத்தினார். வளர்ச்சி சீராக இருக்க வேண்டும் - அது அளவிற்கு மேல் வீங்கி உடலின் வீக்கமாக மாறிவிடக் கூடாது.  செல்வம் சேர்வது அதிகமாகின்ற போது ஆணவமும் வளர்ந்து விடுகின்றது. பணம் வேண்டுமானால் சமபாதிப்பவனுடையதாக் இருக்கலாம் ஆனால் அதனைக் கொண்டு அவன் செய்கின்ற செயல் அடுத்தவர்களுக்குத் துன்பம் தராததாக இருக்க வேண்டும். அளவிற்கு மீறி ஆடம்பர ஆணவத்தோடு உணவுப் பொருட்களை வீணாக்குவது மிகப் பெரிய குற்றம். உணவென்பது உலகத்திற்குச் சொந்தமானது - பொதுவானது - அதனைத் தனி ஒரு மனிதன் வீணடிக்கக் கூடாது என்பதை உணவு விடுதிக்குச் சென்று கண்ணில் கண்டதை எல்லாம் வாங்கி உண்ணாமல் மேசையிலேயே அரைகுறையாய் வீணடிக்கின்ற செல்வச் சீமான்களீன் செயலைச் சுட்டிக் காட்டினார். 

ஈட்டுகின்ற பொருள் தமக்கும் பிறர்க்கும் இனபத்தைத் தரவேண்டும். நல்வழியில் ஈட்ட வேண்டும் - நல்லதைச் செய்ய உதவ வேண்டும். இது பொருள் தேடும் முறை. இப்படித் தேடும் பொருளே செல்வமாக மாறும். 
செல்வத்தைத் தேடும் செயலில் விடாமுயற்சி வேண்டும் என்பதற்கு விறகு வெட்டியின் கதையை விளக்கமாகக் கூறி - நீ காட்டிற்குள் செல் - இன்னும் சந்தனக் காட்டிற்குள் செல் - வெள்ளிச் சுரங்கத்தைப் பார் - இன்னும் சென்று தங்கச் சுரங்கத்தைப் பார் - இதற்கும் மேலே சென்று வைரச் சுரங்கத்தைப் பார் - என்று விடாமுயற்சியோடு செயல்படும்  மனிதனுக்கு  எழு ! விழித்தெழு ! குறிக்கோளை அடையும் வரை போராடு !  என்ற விவேகானந்தரின் வீர உரையை எடுத்துக் காட்டினார். தேடுகின்ற ஒரு பொருட்செல்வம் நமக்கு நன்மையும் வளமும் பெயரும் புகழும் நன்மக்களும் வீரமும் கொடையும் கல்வியும் பயனும் ஆகிய பிற செலவ்ங்களை எல்லாம் தந்து விடும். எனவே இத்தகையச் செல்வத்தைச் சேர்க்க வேண்டும் - பொருளைத் தேடலாம் - ஆனல் அதனைத் துரத்தும் ஆசையை அடக்க வேண்டும் என்ற நோக்கத்தை அழுத்தமாக எடுத்துரைத்தார்.  

இக்கருத்துகளை எல்லாம் கூறிய அவர் நான் ஒரு பேச்சாளன் அல்லன் - எனது நோக்கம் நான் கூறுவது கேட்பவரைச் சென்றடைய வேண்டும் என்பதே ! தொண்டரொடு கூட்டுக் கண்டாய் என்ற தொடருக்கு அடக்கத்தின் விளைநிலமாய் துறவியின் சொற்கள் அமைந்தது. உள்ளத்தைத் தொட்டது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் : செல்வி ஷங்கர் @ மெய்யமை சிதம்பரம். 

நல்வாழ்த்துகள் 
நட்புடன் சீனா @ சிதம்பரம்.   



Tuesday, 29 January 2013

டாலர் நகரம் - நூல் வெளியீட்டு (திரு) விழா


27.01.2013 ஞாயிறன்று  திருப்பூரில் நடைபெற்ற  திருப்பூர்ப் பதிவர் நண்பர் ஜோதிஜி யின் டாலர் நகரம்நூல் வெளியீட்டு விழா - ஒரு பார்வை.

ஏறத்தாழ மூன்று மணி நேரம் நடைபெற்ற விழா. நல்ல சிந்தனையைத் தூண்டும் ஒரு பயனுள்ள நிகழ்ச்சி. புத்தகங்கள் மனித மனங்களை புத்தாக்கம் பெறச்செய்கின்றன என்பதை நேரிடையாகக் கண்டேன்.  நமக்குத் தெரிந்ததை நாம் எழுதுகின்றோம் -  இது என்ன எல்லார்க்கும் பயன் படவா போகின்றது என்ற தட்டிக் கழிக்கும் சிந்தனை இன்றி - தான் சிந்தித்ததை எல்லாம் அவ்வப்போது பதிவில் எழுதி அதை ஒரு நூல் வடிவமாக்கிய ஜோதிஜியின் முயற்சியை அனைவரும் பாராட்டினர். 

அந்நூலில் முழுவதும் திருப்பூர் நகரின் தொழில் வளர்ச்சி, அதனால் ஏற்பட்ட விளைவுகள், படைப்பாளியாகத் தன்னுடைய அனுபவம் , தொழில் முனைவராக தன் தொழில் ஈடுபாட்டு வளர்ச்சி, அத்தொழிலின் ஏற்ற இறக்கங்கள்,  அவற்றின் நன்மை தீமைகள், அவற்றைக் களைவதற்கான வழி முறைகள் ஆகியவற்றை தன் பட்டறிவால் உணர்ந்து எழுதி இருப்பதை பாராட்டுரை வழங்கிய அனைவரும் பாராட்டியதோடு, இந்நூல் முழுவதும் 100 விழுக்காடு அவற்றிற்குத் தீர்வு கூற வில்லை - 40, 45 விழுக்காடுகள் தன் அனுபவத்தால் கண்ட தீர்வுகளைக் கூறி இருப்பதும், இதனால் இது பற்றிய தொடர் சிந்தனைகள் எதிர் காலத்தில் இன்னொரு நூல் வடிவமாய்த் தொடரும் என பேச்சாளர்கள் அனைவரும் வாழ்த்தினர்.


 மேடையில் தொகுத்து வழங்கிய வெயிலான்,  நூலாசிரியர் ஜோதிஜி - பதிவர் புதுகை அப்துல்லா,   திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத் தலைவர் கே.பி.கே செல்வராஜ், திருப்பூர் தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் கே.தங்கவேல், , ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் ஞானி ஆகிய சிறப்பு விருந்தினர்கள்  நூலின் படைப்பாளையைப் பாராட்டிப் பல்வேறு பொதுக் கருத்துகளையும் எடுத்துக் கூறியது சிறப்பாய் இருந்தது. 

இடை இடையே தாய்த்தமிழ் மழலையர் பள்ளிச் சிறுமியரின் கவிதைகளும் பாடல்களும் இடம் பெற்றன. புரட்சிகரச் சிந்தனை அமைந்த அப்பாடல்கள் அச்சிறுமியரின் வயதுக்கும் அப்பாற்பட்ட முயற்சி. ஒரு சொல்லில் பாராட்டுகள் என்பதெல்லாம் அவர்களுக்குப் போதாது. வளரும் சிறுமியரின் தொடர் முயற்சி வாழ்த்தி வரவேற்க வேண்டிய ஒன்றாகும். 

தொடரட்டும் இந்நல்முயற்சி - நல்வாழ்த்துகள்.

பதிவர்களையும் வலையுலக நண்பர்களையும் கண்டு உளம் மகிழ உறவாடி மகிழ இந்நூல் வெளியீட்டு விழா துணையாக இருந்தது. படைப்பாளி மேடையில் அமர்ந்திருக்க அவரின் கரங்களைப் போன்ற நட்புகள் சுற்றிச் சுழன்று விழா சிறப்புறச் செயல்கள் புரிந்ததைக் கண்ணாறக் காண முடிந்தது. ஜோதிஜீக்கு நட்பின் துணையும் இந்நூல் வெளியிடுவதற்கு ஊன்றுகோலாய் இருந்ததும் காண முடிந்தது. 

உள்ளக் கருத்துகள் உறுதி பயக்கும் நூலாய் வெளி வரட்டும். நிகழகாலத்தை ஆவணப் படுத்தும் இந்நூல் எதிர் காலத்திற்கு ஓர் வழிகாட்டியாய் அமையும் என்பதை பாராட்டுரை வழங்கிய அனைவரது கருத்தும் வெளிப்படுத்தியது.

நல்ல நூல்களைப் படைப்போம் - உலகிற்கு நல்வழி காட்டுவோம்.

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா