ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Friday 19 October 2007

மனத்தில் தோன்றிய எண்ணங்கள்

உன்னையே நீ அறிந்து கொள் !
உன்னால் முடியும் தம்பி !!
நம்மால் முடியாதது என்று ஒன்று உண்டா என்ன ??
அகந்தையா ?
நம்முடைய பலம் என்ன ?
நம்முடைய பலவீனம் என்ன ?
பலவீனத்தை பலமாக மாற்றுவது எப்படி ?
குடும்பம்-அலுவலகம்-சமுதாயம்-
சந்திக்கும் மனிதர்கள் எத்தனை பேர் ?
எததனை விதமான எண்ணங்கள் கொண்டவர்கள் ?
மாற்றுக் கருத்தை சந்திக்க மன வலிமை வேண்டும் !
மாற்றுக் கருத்தை சந்திக்க மறுக்காதே !
ஆய்ந்து பார்த்து முரண்படு !
நல்ல கருத்தெனில் நழுவாமல் ஏற்றுக்கொள் !
ஏற்கத் தக்கதல்ல எனில் தள்ளிப் போடு !
காலம் மாறினால் கருத்துகள் மாறும் !
காய் கனியாகும் ! அல்லது வெம்பிப் போகும் !
சுய சோதனை செய் ! சத்திய சோதனை செய் !
செய்வது எல்லாம் பயன் தரும் செயல்கள் தானா ?
நட்ட விதைகள் அனைத்தும் முளைப்பதில்லை !
அதனால் நடாமலேயே இருக்கலாமா ?
முயற்சிகள் தவறலாம் ! முயல்வது தவறலாமா ?
விரும்பியது கிடைக்க வில்லை !
கிடைத்ததை விரும்பலாமா ?
வேண்டியது வேண்டிய நேரத்தில் கிடைப்பதில்லை !
மற்ற நேரத்தில் கிடைத்தால்
மறுக்கலாமா ?? வெறுக்கலாமா ?
கடமையைச் செய் ! பலனை எதிர்பாராதே !
பலனில்லாத கடமை செய்யத்தான் வேண்டுமா ?
எல்லாக் கடமைகளுக்கும் பலன் உண்டு !
நேரிடையாக மற்றும் மறை முகமாக !
நாம் இன்று மரம் நட்டால்
நாளை மற்றொறுவன் அனுபவிப்பான் !
அதனால் மரம் நடாமலேயே இருக்கலாமா ?
நாம் அனுபவிக்கும் இன்பம் நம்மால் விளைந்ததா ?
யார் நட்ட மரத்தில் யார் பழம் சாப்பிடுவது ?
நடுவதற்கே பிறந்தவர்கள் பலர் !
அனுபவிப்பதற்கே பிறந்தவர்கள் சிலர் !
விழுக்காடு வித்தியாசம் பார்ப்பது அழகல்ல !
நட்டுக்கொண்டே இருப்போம் !
அனுபவித்துக் கொண்டே இருப்போம் !
மனம் மகிழ, பிறர் மகிழ வேண்டும் !
ஒவ்வோர் அரிசியிலும்
பெயர் எழுதப் பட்டிருக்கிறதாம் !
தேட வேண்டும் ! அதுவாக வாராது !

-----------------------------------------------------------------
மனதில் எழுந்த எண்ணங்களை கிறுக்கி விட்டேன்
தொடர்புடைய எண்ணங்களா ??
தொடர்பில்லாத எண்ணங்களா ??
தெரிய வில்லை !!!!!
சுற்றிச் சுற்றிப் பார்த்தால் தலை சுற்றும்.
-----------------------------------------------------------------