ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Sunday 14 March 2010

திருப்பூர் - முயற்சி - ரத்த தானம்

சென்ற ஞாயிறு காலை ஒரு தினசரியின் இணைப்பில் படித்த செய்தி. பகிர வேண்டுமெனத் தோன்றியது.

அன்னிய செலாவணியை ஈட்டித் தருவதில் முன்னிலையில் இருக்கிறது பனியன் நகரமான திருப்பூர். அதே நேரத்தில் சுகாதாரத்திலோ பின் தங்கிக் கிடக்கிறது. வணிக அரங்கில் ஒரு குட்டித் தமிழகமாகத் திகழும் திருப்பூரைச் சுகாதாரத்திலும் முண்ணனிக்குக் கொண்டு வர முயற்சி எடுத்திருக்கிறது ஓர் அமைப்பு. அந்த அமைப்பின் பெயரே "முயற்சி" என்பது தான்.

முயற்சி அமைப்பின் புதுமையான முயற்சி தான் - ஒரு முறை இரத்த தானம் செய்தால் 1.5 இலட்சத்திற்கு ஆயூள் காப்பீடு இலவசமாக வழங்கும் திட்டம்.
திருப்பூர் அரசு மருத்துவ மனையில் குழந்தை திருட்டைத் தடுக்க மருத்துவ மனையில் , இவ்வமைப்பு சி சி டி வி பொருத்தியிருக்கிறது. தொடர்ந்து 1.5 இலட்சத்தில் அரசு மருத்துவ மனையினைச் சுத்தம் செய்திருக்கிறது.

இரத்தம் பற்றாற்குறையினால் சில அறுவைச் சிகிச்சைகள் தள்ளிப் போடுவது அறிந்து இவ்வமைப்பு இரத்த தான முகாம் நடத்தி இரத்தம் தங்கு தடையின்றி கிடைக்க வழி செய்திருக்கிறது.

இத்திட்டத்தை நிறைவேற்றும் வகையில் 640 பேரினை உறுப்பினராக்கி - முகாம்கள் நடத்தி, 500க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து இரத்தம் பெறப்பட்டு உள்ளது. இப்பொழுது இரத்த தானம் செய்பவர்களீன் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.

இரத்த தானம் செய்பவர்களுக்கு ஏதாவது கைமாறு செய்ய வேண்டுமென எண்ணி, பணமோ பொருளோ கொடுத்தால் தானம் செய்பவர்களை அவமதிப்பது போல ஆகிவிடுமே என நினைத்து அவர்களுக்கு ஒரு ஆண்டிற்கான இலவச ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திற்கான பாலிசி வழங்க முன்வந்தனர் முயற்சி அமைப்பின் நிர்வாகிகள்.

இரத்த தானம் செய்பவர்கள் ச்மூகத்தில் மிகவும் குறைவு. அதே நேரத்தில் தானம் செய்பவர்கள் விபத்துகளில் பாதிக்கப்பட்டால் வறுமை காரணமாக உயிர் இழக்கும் சூழல் ஏற்படுகிறது. அதே போல் சிலர் நோயின் கொடுமையாலும் துயரப்படுகின்றனர். எனவே இவர்களுக்கு 1.25 இலட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு பாலிசியும் 25 ஆயிரம் மதிப்புள்ள மருத்துவக் காப்பீடு பாலிசியும் இவ்வமைப்பினர் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

ஒரு முறை இரத்த தானம் செய்தாலே போதும். இந்தக் காப்பீடு வசதி அளிக்கப்படும். மருத்துவ மனைகளில் 24 மனி நேரம் தங்கி செஇகிசை பெறும் நோய்களுக்கு மருத்துவக் காப்பீடு பாலிசி கை கொடுக்கும். இரத்த தானம் செய்யும் பழக்கம் அதிகரிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இத்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஊரிலும் ஒரு "முயற்சி" அமைப்பு தோண்றினால் போதும் - இரத்த தானத்தில் தமிழகம் முதலிடத்துக்கு வந்து விடும்.


நண்பர்களே ! இரத்த தானம் செய்யுங்கள் !

நல்வழ்த்துகள்

நட்புடன் சீனா

Monday 1 March 2010

ஊமை நெஞ்சங்கள் !!!!!

தமிழ் அரசி - 22.11.1992 வார இதழில் அறிமுக எழுத்தாளர் வரிசை எண் : 3ல் - எனது செல்ல மகள் - இளைய மகள் எழுதிய கதை ஒன்று பிரசுரமானது. அவ்வறிமுகத்தையும் அக்கதையையும் இங்கு பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அறிமுகம் :

சென்னை சௌகார்பேட்டையில், மூங்கிபாய் கோயங்கா பெண்கள் மேல்நிலைப்பள்ளீயில் '+2' முதலாண்டு பயிலும் செல்வி பிரியா, கடந்த 1992 மார்ச்சில் நடைபெற்ற பொதுத்தேர்வில், பள்ளியிலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றதுடன், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசுகள் பல பெற்றதும் உண்டு.

பிரியாவின் தந்தை வங்கிப் பணியாளர் - தாய் தமிழாசிரியை.

பிரியாவின் முதல் கதை "ஊமை நெஞசங்கள்" மனித மனங்களை நன்றாகப் படித்து, உணர்ந்து, தந்தையையும் மகளையும் வெகு இயல்பாகவே பேச விட்டிருக்கிறார்.

வாழ்த்துகள் !

இனி கதை :

பாரதி :

அலாரம் அடித்தது.

சே ... ! அதுக்குள்ளெ விடிஞ்சிடுச்சா ? இனிமே எழுந்து, குளிச்சு, சமைச்சு, டிபன் பாக்ஸில் கட்டி, காலேஜுக்குக் கிளம்பி ..... ?

அலாரம் கடிகாரத்தைக் கண்டு பிடித்தவன் மேல் கோபம் கோபமாய் வந்தது. வேறு வழி இல்லாமல், படுக்கையிலிருந்து எழுந்தேன்.

எதிர்ச் சுவர்ப் படத்தில் அம்மா சிரித்துக் கொண்டிருந்தாள்.

எனக்கு மட்டும் ஏம்மா சிரிப்பே வரமாட்டேங்குது ? எப்படி வரும் ? காலையிலே எழுந்தப்புறம் இந்த வீட்டுக்குள்ளே நான் பார்க்கிற ஒரே முகம் அப்பா முகம்தான். அதைப்பார்த்தாலே கோபம் பொத்துக்கிட்டு வருது. அப்புறம் எங்கேயிருந்து சிரிப்பு வரும் ? சலிப்புடன் திரும்பினேன்.

அழகிய சூரியன் மறையும் காட்சி சுவரில் ஓவியமாய்த் தொங்கியது.

சூரியன் மறைந்ததனால் கறுத்த ... சே ! எதைப் பார்த்தாலும் இந்தக் கவிதை மட்டும் தோணிருமே ....

எனக்குக் கவிதை என்றாலே பிடிப்பதில்லை. அப்பா எழுத ஆரம்பித்ததிலிருந்து ! மூன்று வருஷங்களுக்கு முன் அம்மா போன பின், எழுத ஆரம்பித்தவர்தான் ... இன்னும் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார். எழுத ஆரம்பித்தால் சகல*மும் மறந்து சோகம் அவரைச் சூழ்ந்து விடும்.

சுந்தரேசன் :

கட்டிலில் படுத்திருந்த எனக்கு மனம் ஏனோ கனத்தது. ஜானகி ! ... மனம் பூரா ஜானகி சூழ்ந்திருந்தா, கனக்காம என்ன செய்யும் ?

"சீக்கிரம் எழுந்திருங்க. நேரமாச்சு. காபி போட்டு வெச்சுருக்கேன். ஆறிடப் போவுது. " என்று எழுப்புவதிலிருந்து, "இவ்வளவு நேரம் ஆஃபீஸிலே என்ன பண்ணிட்டிருந்தீங்க ? இப்ப வந்து லைட்டப் போட்டுக்கிட்டு, கொட்டக் கொட்ட முழிச்சிக்கிட்டு ஆஃபீஸ் ஃபைலப் பாத்துக்கிட்டு இருக்கீங்களே? "என்று செல்லமாய்த் திட்டி, இரவு தூங்கும் வரை என்னைப்பற்றியே நினைத்துக்கொண்டு இருந்த அவளுக்கு,எப்படி என்னை விட்டுப் போக மனசு வந்தது ?

மூணு வருஷம் ஆச்சு ! அவள் போய் ! ஆனா எனக்குமட்டும் இன்றும் வாழ்ந்து க்கிட்டுருக்கா ! .... கவிதையாய் .... ? வேகமாய் எழுந்து பேப்பரையும் பேனாவையும் எடுத்தேன் !

பாரதி :

அப்பாவைத் தவிர்த்து ரூமை விட்டு வெளியே வந்தேன். தேதிப் படம் கிழிக்காமலிருந்தது. கிழித்தேன். எனக்குள் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது. இன்று ஞாயிற்றுக் கிழமை. காலேஜ் லீவ். இந்த மூன்று அறை வீட்டுக்குள்ளேயே , அப்பா முகத்தைப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியது தான். வாச்ற்கதவைத் திறந்து பால் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தேன். வரும்போது பார்த்தேன். ரூம் கதவு மூடி இருந்தது. அப்பா இன்னும் எழுந்திருக்க வில்லை போலிருக்கிறது. பாக்கெட்டையும் துடைப்பத்தையும் எடுத்துக் கொண்டு வாசலுக்குச் சென்றேன். ஒரு கோலத்தைப் போட்டு விட்டு உள்ளே வந்தேன். ரூம் கதவு திறந்திருந்தது. அப்பா சோஃபாவில் அமர்ந்திருந்தார். ஹூம். - இதுல ஒண்ணும் கொறச்சலில்ல - எழுந்த உடன் காஃபி வந்துடணும் - அதில் அவர் உடகார்ந்திருந்தார் என்றால் காஃபி வேணும்னு அர்த்தம். நானாக அர்த்தம் பண்ணிக் கொண்டதுதான் அதுவும் !

எனக்குப் பத்திக் கொண்டு வந்தது. ஒரு நாளாவது, என்னம்மா ? - காலேஜா ? - லீவு போடேன் - வெளியில போலாம் - சாப்பிட்டியா ? - ரொம்ப நேரம் கண் விழிக்காதெ ! - உடம்பு கெட்டுடும். நோட்ஸ் கேட்டியே - இந்தா - முப்பது சொன்னான் - 27க்கு வாங்கினேன் - இப்படி ஏதாவது சொல்ல மாட்டாரா ? - சரி. அதுவும் வேண்டாம். வீட்டுல ஒருத்தி இருப்பதாவது நினைவிருக்க வேண்டாமா ? பேசி மூணு வருஷம் ஆச்சு ! என்னதான் நினைச்சிக் கிட்டு இருக்காருன்னு தெரில ! இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பாத்திரணும். மனம் தவித்தது !

சுந்தரேசன் :

காஃபி வந்தது. குடித்து விட்டுக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டு சென்று விட்டாள்.

என மகள் பாரதியை நினைக்கும் போது பெருமையா இருக்கும். ஜானகி போனதிலிருந்து என்னிடம் எதையும் எதிர்பார்க்காதவள். இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்காதவள். தன் தேவைகளைத் தானே பூர்த்தி செய்து கொள்பவள்.

அவளுக்கு அதிகம் பேசினால் பிடிக்காது. எப்போதும் படித்துக் கொண்டிருப்பாள். இரவு பகலென்று பார்க்க மாட்டாள். தனக்கு வேண்டிய புத்தகங்களைக் கூட தானே வாங்கிக் கொள்வாள். என்னைத் தொந்தரவு செய்யக்கூடதென்ற நினைப்போ என்னவோ ?. நான் அவள் போக்கில் அவளை விட்டு விட்டேன். பாவம்.. தாயில்லாப் பெண். அவள் சுதந்திரத்தை ஏன் பறிக்க வேண்டும் ?.

பாரதி :

முடிவு செய்து விட்டேன். இன்றிரவு பேசித் தீர்த்துவிடுவதென்று. ந்றுக்கிக் கொண்டிருந்த கத்தரிக் காயை அப்படியே விட்டு விட்டு, அவர் எதிரில் போய் நின்றேன். கவனிக்க வில்லை "அப்பா ! ".

சுந்தரேசன் :

நிமிர்ந்த எனக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியுமாய் இருந்தது. என் மகள் என்னை "அப்பா ! " என்று மூணு வருஷத்துக்கு அப்புறமாய்க் கூப்பிடுகிறாள் . என்னம்மா ? சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்று கேட்டேன் !

பாரதி :

இவரென்ன - தன் பெண் ஊமை என்று நினைத்துக் கொண்டாரா ? ஒரு வார்த்தை பேசியதற்கே இப்படி ஆச்சரியமாய்ப் பார்க்கிறாரே !

"உங்க கிட்டே கொஞ்சம் பேசணும் அப்பா ! "

"தாரளமா ! என்னம்மா வேணும் ? "

இந்தக் கேள்வியக் கேட்க இப்பொழுதுதான் தோன்றியதா ? இவ்வளவு நாட்களாக அடக்கி வைத்திருந்ததைக் கொட்டி விட்டேன் :

"இதைக் கேட்க இப்பவாவது தோணிச்சே அப்பா ! : ஒரு நாளாவது என் கிட்டே பேசி இருப்பீங்களா ? அம்மா போய்ட்டான்னா - அவ கூட சேந்து நானுமா போய்ட்டேன் ? போனவங்களுக்கு வருத்தப் படறீங்களே - இருக்கறவங்களுக்கு கவலைப்பட்டீங்களா ? உங்க மக என்ன பெரிய ஞானின்னு மனசில நினைப்பா ? எதையுமே உங்க கிட்டே கேக்காம, பேசாம, ஊமையா எல்லாத்தயும் செஞ்சிகிட்டு இருக்க ? அப்படி இருந்தா, பைத்தியம் தான் பிடிக்கும் ! அதனாலே தான் இன்னைக்குக் கேக்கறேன் - ஏன் பேசமாட்டேங்கறீங்க ?

சுந்தரேசன் :

எனக்குத் துக்கம் தொண்டைய அடச்சிது .

பாரதி :

உங்க மனைவிய நாந்தான் அனுபிச்சுட்டேன்னு நினைக்கிறீங்களா ? நான் என்னப்பா பண்ண முடியும் ? அமமாவுக்கு ஹார்ட் அட்டாக் - போதிய வசதி இல்ல . ஆப்பரேஷனுக்கு. அதுக்காகத் தெனந்தெனம் நான் சாகனூமா ? பிளீஸ் அப்பா ! என்னச் சித்திரவத பண்ணாதீங்க ! அழுதே விட்டேன் !

சுந்தரேசன் :

காலடியிலே பூமி நழுவியது. இவ்வளவு உணர்ச்சிகளா பாரதி மனசில ! சே ... ! எப்படி அரக்கத்தனமா நடந்து கிட்டு இருந்திருக்கேன் ! எம்பொண்ணய புரிஞ்சிக்க முடியலியே என்னால..... ! எனன் அப்பா நான் ? அழுது கொண்டிருந்த மகளை ஆதரவாய் அணைத்துக் கொண்டேன்.

பாரதி ! இத்தன வருஷம் நாம ரெண்டு பேரும் நடக்கிறது என்னன்னு தெரிஞ்சிக்காம இருந்திட்டோம். சத்தியமா சொல்றேம்மா ! நான், நீ நெனெக்கிற மாதிரி இல்ல ! நீ எதயும் எதிர்பாக்காதவன்னு நெனெச்சது தப்புதான். ஆனா ஒண்ணு - இந்த ஊமை நாடகம் தொடர - இனி - நிச்சயமா நான் விட மாட்டேன். - என்ன நம்பும்மா - என்ன நம்பு !

பாரதி :

எனக்கு ஏதோ புரிந்தது - ஏதோ புரியவில்லை - ஆனால், என் அப்பா எனக்குக் கிடைத்து விட்டார் என்பது மட்டும் தெளிவாகவே புரிந்தது !

----------------------------

நட்புடன் சீனா .