ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Friday 18 January 2008

எழுதுனதுலே பிடிச்சது (யாருக்கு)

எல்லோருக்கும் வணக்கம்.

நம்ம கண்மணி பெஸ்ட் கண்ணா பெஸ்ட் னு ஒரு பதிவுலே - எல்லாப் பதிவர்களையும் அழைச்சு எழுதுனதிலேயே சிறந்தது எதுன்னு கேட்டிருந்தாங்க. சர்வேசன் வேற அந்தப் பதிவெல்லாம் கட்டம் கட்டிப் போடப் போறாராம். இருக்கட்டும்.

நான் 2007 ஆகஸ்டு மாசம் தான் வலைப்பூக்கள் பக்கமே வந்தேன். என்னுடைய இளமைக்கால மலரும் நினைவுகளை அசைபோடுவது என்று ஆரம்பித்தேன். ஆரம்பித்ததில் இருந்த வேகம் பின்னர் இல்லை. இன்னும் எழுத நினைத்தது ஏராளம் இருக்கிறது.

அடுத்து படித்ததில் பிடித்தது என ஒரு பதிவு ஆரம்பித்து நான் படித்தவைகளில் என் மனதுக்குப் பிடித்தவைகளை அப்படியே எழுதி வந்தேன். அதிலும் படித்தவை ஏராளம் - பிடித்தவை ஏராளம். எழுதியதோ கொஞ்சம் தான்.

நண்பர் தருமியின் தயவால் நண்பர் ராம் தலைமையில் மதுரை மாநகரம் என்ற குழுப்பதிவிலும் எழுதி வந்தேன்.

ஏனோ தெரியவில்லை. எழுதுவதில் இருந்த விருப்பம் பதிவுகளைப் படித்து மறுமொழி இடுவதற்கு மாறியது. அதிக மறுமொழி இட்டவர்கள் பட்டியலில் முதலில் எனது பெயர் தொடர்ந்து இருந்த வண்ணம் அதிகப் பதிவுகளைப் படித்தேன். அதிக மறுமொழிகள் இட்டேன். ஒரு சமயம் அனானிமஸ்ஸையும் தாண்டி எனது பெயர் முதலில் இருந்தது.

எனக்கு எழுதியதில் இருந்த இன்பத்தை விட பதிவுகளைப் படித்ததிலும், பொருள் பொதிந்த மறு மொழிகள் எழுதியதிலும் அதிக இன்பம் பெற்றேன். அதிக நேரம் செலவிட்டேன். அதிக நண்பர்களைப் பெற்றென்.

இப்போது கண்மணி கேட்டதால், எழுதியதைத் திரும்பப் படித்தேன். எழுதியதே குறைவு. அதில் சிறந்தது எது ? தாய்க்கு எல்லாக் குழந்தைகளையுமே சமமாகப் பாவித்துத் தான் பழக்கம். இருப்பினும் ஒரு குழந்தையிடம் சற்றே அன்பு அதிகம் இருக்கத்தானெ செய்யும்.

அதைப்போல , நான் மதுரை மாநகரத்தில் எழுதிய " மலரும் தீபத் திருவிழா நினைவுகள் " என்ற பதிவு மனதுக்குப் பிடித்த பதிவும் அதிக மறுமொழிகள் பெற்ற பதிவுமாகும். எனவே அப்பதிவினையே எனக்குப் பிடித்த - நான் எழுதியதில் சிறந்த - பதிவாகத் தேர்ந்தெடுக்கிறென்.

அழைத்த கண்மணிக்கு நன்றி. சர்வேசனுக்கும் நன்றி.